தமிழ் மொழிப்பாடம் கட்டாயம்... டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய விதிகள் அறிமுகம்!

author img

By

Published : Sep 24, 2021, 4:55 PM IST

tnpsc-introduced-new-rules-to-prevent-join-other-state-person-in-tn-jobs

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 75 நாட்களுக்குப் பின்னரே எழுத்துத் தேர்வு நடைபெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு 35க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கரோனோ காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை.

இந்நிலையில், தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன், உறுப்பினர்கள், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி தேர்வுகளை நடத்துவது குறித்தும், அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் புதிய விதிகளை வகுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

தமிழ் மொழிப்பாடம் கட்டாயம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சேர்ந்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை வைத்தனர். எனவே, தமிழ்நாடு அரசுத் துறை, மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

அதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து தேர்வுகளிலும் தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழித்தாள் தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக 45 நிர்ணயிக்கப்பட உள்ளது.

மேலும், அரசுப் பணிகளில் கரோனா தொற்றின் காரணமாக 2 ஆண்டுகள் தளர்வு வழங்கி ஏற்கெனவே அரசு அனுமதி அளித்துள்ளது. வன்னியருக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டிற்கு அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கி உள்ளது.

அக்டோபரில் தேர்வு

பெண்களுக்கான நியமனங்களில் 40 விழுக்காடு ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசின் உத்தரவு பெறப்பட வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக குருப் 1, 2,4 உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கருத்துருக்கள் தேர்வாணையத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கான அனுமதிகள் பெறப்பட்டவுடன், அக்டோபர் மாதம் துறைவாரியாக உள்ள காலிப்பணியிடங்களின் பட்டியலுடன், அறிவிப்புகளும், தேர்வு நடைபெறும் தேதியும் வெளியிடப்படும்.

தேர்வாணையத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பின்னர், 75 நாட்கள் கழித்துதான் எழுத்துத் தேர்வு நடத்துப்படும் எனவும் அதற்கான ஒப்புதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி- தமிழ் வழி பயின்றோர் சான்றிதழ் பதிவேற்ற உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.