டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்குத் தயாராகி வருபவரா நீங்கள்? - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்குத் தயாராகி வருபவரா நீங்கள்? - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4 AIM TN: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இணையதள பயிற்சி வகுப்புகள் மூலம் பயன் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள தொகுதி IV (Group IV)-க்கான தகுதித் தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்வுகளில் அதிக அளவில் ஊரகப்பகுதி மாணவர்கள் மற்றும் வசதி வாய்ப்பற்ற மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் வகையில், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் இணையதள பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியர்களைக் கொண்டு திட்டமிட்டுள்ளது.
எனவே, தகுதி வாய்ந்த அனைவரும், தங்களிடமுள்ள திறன் செல்லிடைப்பேசி (Smart Phone) வாயிலாக இந்த இணைய வழி வகுப்புகள் மூலம் இலவசமாக பாடங்களைக் கற்று தகுதித் தேர்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தொகுதி || மற்றும் IIA (Group 2, 2A) பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இணைய வழி வகுப்புகளாக நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி அதிகளவிலான கிராமப்புற மற்றும் எளிய மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4-க்கான பயிற்சி வகுப்புகள் கடந்த நவம்பர் 13 முதல் தொடங்கப்பட்டு AIM TN என்ற யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது. சிறந்த பாட வல்லுனர்களைக் கொண்டும், பாடத் திட்டங்களை தொகுதி வாரியாக வடிவமைத்தும், நெறிப்படுத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் நடத்தப்படும்.
ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டு, மாதிரித் தேர்வு நடத்தி அதனை மதிப்பீடு செய்து முடிவுகள் வெளியிடப்படும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நேரலை மூலம் வினாத்தாள் குறித்த விவாதம் நடைபெறும். இதன் மூலம் மாணாக்கர்கள் தவறுகளை களையவும், அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் இயலும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வினை முனைப்புடன் எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில், AIM TN என்ற யூடியூப் சேனலை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
