வேளாண்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இந்த அரசு அனுமதிக்காது - முதலமைச்சர்

author img

By

Published : May 12, 2022, 3:11 PM IST

Updated : May 12, 2022, 3:52 PM IST

வேளாண்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இந்த அரசு அனுமதிக்காது - முதலமைச்சர்

காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எவ்வித தொழிற்சாலைகளையும் இந்த அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்ட அரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காவிரி டெல்டா என்பது மிகவும் செழிப்பான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் முழுப்பகுதியையும், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

காவிரி நதியின் மூலம் பாசனம் கிடைக்கப்பெறுவதால், இப்பகுதிகளில் நெல் ஒரு முக்கியமான பயிராக கிட்டத்தட்ட 14 லட்சம் ஏக்கர் பரப்பிலே சாகுபடி செய்யப்பட்டு, மாநிலத்தின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் 34 விழுக்காடு அரிசி உற்பத்தியினை இந்தக் காவிரி டெல்டா பகுதி அளித்து வருகிறது.

தென்னை, கரும்பு, வாழை, மக்காச்சோளம், பயிறு வகைகள், எள், பருத்தி போன்ற பயிர்களும், டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், இந்தப் பகுதியே மிகப்பெரிய வேளாண் மண்டலமாகக் காணப்படுகிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திமுக அரசு உறுதி: காவிரி டெல்டா பகுதியில் விளைநிலங்களைப் பாதுகாக்கவும், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களை மேம்படுத்தவும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

சட்டத்தினை மட்டும் இயற்றிவிட்டு, அதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர எந்தவொரு முன்னெடுப்பையும் முந்தைய அரசு எடுக்கவில்லை. முந்தைய ஆட்சி கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும், அது வேளாண் பெருமக்களுடைய நலனைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளை அளிக்கக்கூடிய சட்டமாக இருக்கிற காரணத்தால், அந்தச் சட்டத்தின் கூறுகளையெல்லாம் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் நம்முடைய அரசு உறுதியாக இருக்கிறது.

தூர்வாரும் பணிகள்: உழவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அரசுதான் நம்முடைய அரசு. சென்ற ஆண்டில் மேட்டூர் அணையினை குறித்த காலத்திலேயே, அதாவது ஜூன் 12ஆம் தேதியே திறந்து, 61 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை நம்முடைய அரசு செயல்படுத்திக் காட்டியிருக்கிறது. மேட்டூர் அணையினைத் திறப்பதற்கு முன்பாகவே, பாசனக் கால்வாய்கள் அனைத்தையும் 65 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளை முடுக்கிவிட்டது நம்முடைய அரசு.

அதன் விளைவாக, கடந்த 2021ஆம் ஆண்டின் குறுவை நெல் சாகுபடிப் பரப்பு 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரைக் கடந்து, கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனையினை நாம் ஏற்படுத்தினோம். தூர்வாரக்கூடிய பணிகள் 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், நெல் ஜெயராமன் அவர்களின் பெயரில் மரபுசார் நெல் ரகங்களை மீட்டெடுக்கும் திட்டம் ஆகியவற்றையும் நாம் அறிவித்திருக்கிறோம்.

வேளாண்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இந்த அரசு அனுமதிக்காது - முதலமைச்சர்
வேளாண்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இந்த அரசு அனுமதிக்காது - முதலமைச்சர்

காவிரி டெல்டாவில் 30 கோடியே 50 இலட்சம் ரூபாயில் திருவாரூரில் சேமிப்புக் கிடங்குகள், உலர் களங்கள், காட்டுமன்னார்கோவில், பேராவூரணி பகுதிகளில் புதிய உழவர் சந்தைகள், திருவாரூர் பகுதியில் உணவுப்பூங்கா, 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மானியத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம்,

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி போன்ற மாவட்டங்களை உள்ளடக்கி, அரிசி ஆலைகள், பயிறு உடைக்கும் நிலையங்கள், எண்ணெய் பிழியும் ஆலைகள், கயிறு ஆலைகள் போன்ற பல்வேறு வேளாண் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில், திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையே இருக்கக்கூடிய பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவிக்கை (Declaration of Agro-Industrial Corridor) செய்யப்பட்டது.

இவ்வாறு பல்வேறு திட்டங்களை வேளாண் பெருமக்கள் நலன் காக்க கடந்த ஓராண்டில் அறிவித்து, அவற்றையெல்லாம் நாம் செயல்படுத்தி வருகிறோம். காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் இந்த அரசு அனுமதிக்காது. பாசன நீரைப் பொறுத்தமட்டில், கர்நாடகாவிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவதற்கு இந்த அரசு சட்டரீதியான, அரசியல் ரீதியான எல்லா ஏற்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளும்.

வேளாண்மையைக் காக்க வேண்டும்: பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும். அதற்காக அரசு மேற்கொள்ளக்கூடிய முன்னெடுப்புகளுக்கு நீங்களெல்லாம் ஒத்துழைப்பு வழங்கி, துணை நிற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கக்கூடிய வகையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய பயிர் வகைகளையும், புதிய மாற்றுத் தொழில்நுட்பங்களையும் உடனுக்குடன் ஏற்று நடைமுறைப்படுத்தி நல்ல விளைச்சலை அடைய வேண்டும். வேளாண் தொழிலில் வருமானம் பெருக்கப்பட வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் குறுவை மற்றும் கோடைப்பருவத்தில் குறைந்த நீர்த் தேவையுள்ள மாற்றுப் பயிர் சாகுபடியினை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, மதிப்புக்கூட்டுதல் போன்ற ஆலோசனைகளை உள்வாங்கி செயல்படுத்திட வேண்டும். இத்தகைய பயிர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, உழவர்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் துணை நிற்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச்சட்டத்தில் உள்ள எல்லாப் பிரிவுகளும், செயல்பாட்டிற்கு வரும் வகையில், விவசாயிகளும், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் நல்ல முறையிலே கருத்துப் பரிமாற்றங்கள் செய்து, காவிரி டெல்டா பகுதிக்கென நீண்ட காலத் திட்டம் ஒன்றை வகுக்க உங்களது உயரிய பங்களிப்பையும், கருத்துகளையும், ஆலோசனைகளையும் இந்தக் கூட்டத்திலே வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

வளமான தமிழ்நாடு அமைக்க வேளாண்மையைக் காக்க வேண்டும். தமிழ்நாட்டில், டெல்டா மாவட்டங்கள் வேளாண்மையின் மிக முக்கியமான அங்கம் என்கிற காரணத்தால், அதனைக் கண்ணும் கருத்துமாக காக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: சொத்துவரி உயர்வுதான், திராவிட மாடலா? மு.க. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி!

Last Updated :May 12, 2022, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.