'நவ. 29இல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்'

author img

By

Published : Nov 25, 2021, 3:45 PM IST

வானிலை ஆய்வுமையம்

தெற்கு அந்தமானில் வருகின்ற 29ஆம் தேதி புதியதாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாகவும், வங்கக் கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பில்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (நவம்பர் 25) செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தெற்கு வங்க கடற்பகுதியில் (3.1 கி.மீ. உயரம் வரை) நிலவிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அதே இடத்தில் நீடிக்கின்றது.

இது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை. இதன் காரணமாக இன்று (நவமபர் 25) ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, தென் மாவட்டங்களில், அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 26: நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள் - புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் - காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். நாளை சென்னையில் ஒருசில இடங்களில் கன மழை இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று (நவம்பர் 25), நாளை (நவம்பர் 26) குமரி, தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில், சூறாவளி காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

நவம்பர் 27ஆம் தேதி குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நவம்பர் 29ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் பகுதிகள், நிலப்பரப்பில் காற்றின் அழுத்த வேறுபாடு குறைவாக இருப்பதால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவில்லை. இதனால் காற்றின் வேகம் குறைந்து அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. மேலும் இலங்கை நிலப்பகுதியானது காற்றின் சுழற்சியைச் தடுக்கிறது. இதனால் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவில்லை.

இருப்பினும் சுழற்சி உயரம் நீடிப்பதால் கன மழையானது நீடிக்கும். நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகும். இது மேற்கு - வட மேற்குத் திசையில் நகரக்கூடும். இது தமிழ்நாடு பகுதிகளை நெருங்குமா என ஓரிரு நாள்களில் தெரியவரும்” என்றார்.

இதையும் படிங்க: School Leave : 18 மாவட்டங்களில் மழை - பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.