வரும் மார்ச் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

author img

By

Published : Mar 17, 2023, 4:04 PM IST

கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால வெப்பநிலை கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் எனவும்; உள் மாவட்டங்களில் குறைவாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்

சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியிருக்கும் நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக மழை பெய்து வருகிறது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. வெயில் அதிகரிக்க தொடங்கிய நிலையில் மழை பெய்ததால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தற்போது தென் தமிழகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை வடக்கு தெற்காக கிழக்கு திசை காற்றும்; மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வளிமண்டலத்தில் நிலவுகிறது.

இதன் காரணமாக மார்ச் 20ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மிதமான கோடை மழை பெய்யும். சென்னை புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில ஒரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குமரி மாவட்டம் பெருஞ்சாணி, புத்தன் அணையில் 6 செ.மீட்டரும், கோவை, மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரளவு கோடை மழை பெய்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால வெப்பநிலை கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருக்கும். உள் மாவட்டங்களில் குறைவாக இருக்கும்.

ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் (மார்ச் 17), நாளையும் (மார்ச் 18) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், அதிகாலையில் பனியின் தாக்கம் சற்று அதிகரித்தும், மதியம் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் காணப்பட்டது. கோடை காலம் தொடங்கும் முன்பே வெயின் தாக்கம் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் அவதிப்பட்டு கொண்டிருந்தனர்.

காற்றின் வேகமும் குறைவாக இருந்த நிலையில் இன்று (மார்ச் 17) அதிகாலை முதலே சென்னை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்தது. இதனால், விவசாயிகளும் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.