திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் படித்த தனது மனைவியின் ஆராய்ச்சி கட்டுரை திருடப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் அலுவலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே முதல்கட்ட விசாரணை முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2013ம் ஆண்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் முதுகலை பொது அறுவை சிகிச்சை மருத்துவம் படித்தவர் நவீனா. இவருடன் முதுகலை பொது அறுவை சிகிச்சை மருத்துவத்தை நாகலட்சுமி என்பவரும் முடித்துள்ளார்.
இந்த நிலையில் தனது மனைவி நவீனா திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பில் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரையை திருடி ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர் என ஐஏஎஸ் அலுவலர் அவரது சமூக வலைதளத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், அது தொடர்பாக கருத்துக்களை திரட்டி 2020 ஆம் ஆண்டு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட தனது மனைவி திட்டமிட்டு இருந்தார் எனவும் கூறியுள்ளார். இந்தநிலையில் 2017ம் ஆண்டு அவருடைய கருத்துக்களை திருடி வேறு ஒருவர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டுள்ளதாக ஐஏஎஸ் அலுவலர் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து திருட்டு குறித்து திருநெல்வேலி மருத்துவ கல்லூரி முதல்வர் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதிவாளர் ஆகியோருக்கும் விசாரணை செய்ய வேண்டும் என மனு அளித்தாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளருக்கும் தனது புகார் மனுவை அளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அலுவலர் கூறியதாவது;
புகாரின் டிப்படையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இதுகுறித்து விசாரணை செய்ய சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு முதல் கட்ட விசாரணை நடத்தியுள்ளது.
மேலும் கருத்துத் திருட்டு என்பது ஒரு குற்றவியல் நடவடிக்கை என்பதால் முழுமையான விசாரணை மேற்கொள்ளவும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்கள் இருவரிடமும் விசாரணை முழுவதும் முடிந்த பின்னர் அது குறித்து முறையான முடிவு அறிவிக்க முடியும்.
இதனுடன் தொடர்புடைய பிற மருத்துவர்களையும் விசாரித்து வருகின்றனர். இரண்டாம் கட்ட விசாரணை முடிவடைந்த பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிலக்கரி டெண்டருக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு