தமிழ்மொழியை உயர் நீதிமன்றம் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் - முதலமைச்சர்

author img

By

Published : May 12, 2022, 3:33 PM IST

தமிழ்மொழியை உயர்நீதிமன்றம்  அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

தமிழக அரசின் அலுவல் மொழியான தமிழை ஆங்கிலத்துடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையின் அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடிதம் மூலம் பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக நீதியைப் பின்பற்றிட வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நிறுவிட வேண்டுமென்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், '' கூட்டாட்சிக் கட்டமைப்பே இந்திய அரசியலமைப்பின் அடித்தளம், ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டப்பேரவை, நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவை இந்த கூட்டாட்சிக் கட்டமைப்பிற்குள் நிறுவப்பட்டுள்ளன. மாநிலங்களில் பல்வேறு நிலைகளில் நீதிமன்றங்கள் இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும், அலுவலர்களும் பின்பற்றும் வகையில் நீதித் துறையின் அமைப்பு உள்ளது. நீதித்துறையும் நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும்.

இந்தப் பின்னணியில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் நமது நாட்டின் பன்முகத்தன்மையோடு அமைய வேண்டுமென்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகள் நியமிக்கப்படும்போதுதான், பன்முகத் தன்மையும், ஒட்டுமொத்த சமூகத்தின் கண்ணோட்டங்களும், உணர்வுகளும் பிரதிபலிக்க ஏதுவாக இருக்கும்.

அந்த வகையில் உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டுமென்று கருதுகிறேன். எனவே, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மையையும், சமூக நீதியையும் பேணும் வகையில், நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறைக் குறிப்பில் அதற்கேற்ப உரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுக வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளித்தவர்கள் 32ஆவது பிரிவை இயற்றியுள்ளனர். ஆனால் உச்ச நீதிமன்றத்திற்கு அருகில் இருக்கும் மாநிலங்களைச் சார்ந்த குடிமக்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும் நிலை உள்ளது.

மேலும், நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்கள் இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை அதனைச்சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து அதிகம் என்பதை தரவுகளிலிருந்து அறிய முடிகிறது. அரசியல் நிர்ணய சபையில் இது தொடர்பாக நடைபெற்றுள்ள விவாதங்களும், நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் பரிந்துரைகளும், பல்வேறு சட்ட ஆணையங்களின் அறிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை மாநிலங்களில் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.


எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய நான்கு உயர் நீதிமன்றங்களில், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை ஆக்குவதற்கு ஏதுவாக, தமிழ் மொழியில் தரமான சட்ட நூல்களை வெளியிடுவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. செம்மொழியாகவும், அதே சமயம் நவீன மொழியாகவும் உள்ள தமிழ் மொழியினை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக பயன்படுத்துவதே முற்றிலும் பொருத்தமானதாக இருக்கும்

சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்குப் புரியவைப்பது நீதி வழங்கல் அமைப்பின் இன்றியமையாத கடமை. அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநிலத்தின் அலுவல் மொழியை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஆக்குவதில் உள்ள சிரமங்களை நவீன தொழில்நுட்பத்தின்மூலம் எளிதில் சரிசெய்திட முடியும்.

எனவே, தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியான தமிழை ஆங்கிலத்துடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையின் அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் கடந்த 23-4-2022 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், இந்த மூன்று கோரிக்கைகளையும் நான் முன்வைத்தேன். இவை எதிர்காலத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழ் மொழி கட்டாயம்: வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.