ஒரு வாரத்தில் புதிய பிரதமர் நியமனம் - கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

author img

By

Published : May 12, 2022, 8:16 AM IST

இந்த வாரத்தில் புதிய பிரதமரை நியமிப்பதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்

இலங்கை புதிய பிரதமர் ஒரு வாரத்தில் நியமிக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கொழும்பு: நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பாக பரவலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் இந்த வாரம் நியமிப்பதாக இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நியமித்த பின்னர், அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் உள்ளடக்கத்தை சட்டமாக்குவதற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அதிபர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.

"புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கி இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வாய்ப்பு வழங்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

அதிபர் கோத்தபயவின் மூத்த சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததையடுத்து, சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகுத்துள்ள நிலையில், இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக அரசாங்கம் இல்லாத நிலையே காணப்பட்டது. அமைச்சரவை இல்லாமல் நாட்டை நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் நாட்டில் நடந்த வன்முறை குறித்து பேசிய அவர், மே 9 அன்று நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றார். “கொலைகள், தாக்குதல்கள், மிரட்டல் நடவடிக்கைகள், சொத்துக்களை அழித்தல், அதன் பின் தொடரும் கொடூரமான செயல்கள் அனைத்தையும் நியாயப்படுத்த முடியாது” என அதிபர் தெரிவித்தார்.

விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கோத்தபயா தெரிவித்துள்ளார். வன்முறையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு இலங்கை காவல்துறை மற்றும் முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

"இந்த நிகழ்வுகளுக்குத் திட்டமிட்டவர்கள், உதவியவர்கள், மற்றும் தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டதின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் அமைதியைக் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

1948 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க:Sri lanka Crisis: பயமா இருக்கா, இன்னும் பயங்கரமா இருக்கும்- எச்சரிக்கும் இலங்கை வங்கி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.