'சிற்பி' திட்டம் இனி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

author img

By

Published : Nov 30, 2022, 5:01 PM IST

சிற்பி திட்டம்: இனி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!

'சிற்பி' திட்டமானது இனி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை: பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல்துறை ‘சிற்பி’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரியில், ‘சிற்பி’ திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான தேசப்பற்றை ஊக்குவிக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தேசப்பற்று மற்றும் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை அலுவலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ராணுவ விஞ்ஞானி முனைவர் டில்லிபாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ்நாடு முதலமைச்சர் ‘சிற்பி’ என்ற திட்டத்தை கடந்த 14ஆம் தேதி 4.25 கோடி ரூபாய் செலவில் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்சியாக இந்த திட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சிற்பி திட்டத்தில் 100 அரசு பள்ளியிலிருந்து, ஒவ்வொரு பள்ளியிலும் தலா 50 மாணவர்கள் என சுமார் 5,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. அதில் எவ்வாறு ஒழுக்கமாக வாழ வேண்டும், எவ்வாறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும், யோகா செய்வது குறித்து பலவித கருத்துக்களை அவர்களுக்கு சொல்லித் தருவதோடு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

இதை நல்ல விதமாக வடிவமைத்துள்ள சென்னை காவல் துறை உயர் அலுவலர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தில் மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து, வரும் காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்படும். இங்கு பயிற்சி எடுக்கும் மாணவர்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும், எவ்வாறு தேசப்பற்றை உருவாக்க வேண்டும், போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க வேண்டும் போன்ற கருத்துக்களை உள்வாங்கி, அவர்கள் பயிலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களிடையே உரையாடல் செய்து எடுத்துச் சொல்லும் நல்ல விஷயமாக அமைந்துள்ளது.

மாணவர்களை சுற்றாலாத் தளங்களுக்கு அழைத்துச் சென்று ,அங்கு இருக்கும் வரலாற்றுகள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்படும். நல்ல சமூகத்தை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு திட்டமாக இது உள்ளது. வரும் காலங்களில் சிற்பி திட்டத்தினை சென்னை மட்டுமில்லாமல், மற்ற மாவட்ட அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்" என தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு

இந்தியா தன்னிறைவு? இதனைத்தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், “இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளோம். இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டிலேயே செய்த பல பரிசோதனைகள் மற்றும் சாதனைகள்தான்.

இது போன்ற சாதனைகள் எல்லா துறையிலும் செய்ய முடியும். இதனால் நாமும் நாடும் முன்னேற முடியும். இதன் மூலம் தேசப்பற்றை புதிய பரிமாணத்தில் கொண்டு செல்ல முடியும். இதனை மாணவச் செல்வங்கள் தன்னுடைய படிப்புடன் சேர்ந்து தேசப்பற்றை முன்னெடுத்துச் செல்பவர்களாக விளங்குவதற்கான விதையானது இந்த ‘சிற்பி’ திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள முன்னணி துறைகளில் விண்வெளி ஆராய்ச்சி துறையும் ஒன்று. நம் நாட்டில் இருந்து விண்வெளிக்கு இன்னும் மனிதன் மட்டும்தான் அனுப்பப்படவில்லை. மற்ற அனைத்து முயற்சிகளிலும் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்கள் பங்கு அதிகமாக இருந்தாலும்கூட, தமிழ்நாட்டு மண்ணில் விண்வெளி ஆராய்ச்சி குறித்தான பணிகள் அதிகமாக நடைபெறவில்லை.

இந்த நிலையில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்த உடன், அதில் பல்வேறு பணிகளை தமிழ்நாட்டு மாணவர்கள் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் சிக்கனமாக செயற்கைக்கோளை செய்து முடிக்க முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டில் குலசேகரபட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் இந்தியாவுக்கு திருப்பு முனையாக அமையும்” என்றார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் 'சிற்பி' திட்டம் எப்படி செயல்படும்? - அறிந்துகொள்வோம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.