சென்னை : கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அங்குள்ள சிசிடிவி காட்சியின் அடிப்படையில் தடியாட்டபரம்ப காவல் நிலைய போலீசார் அடையாம் தெரியாத இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்து விட்டு சென்னைக்கு ரயிலில் தப்பியோடிய நபர் குறித்து சம்பந்தப்பட்ட கேரளா போலீசார், சென்னை ரயில்வே பாதுகாப்புப்படை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல், எர்ணாகுளம் ரயில் நிலையத்துக்கு வந்த சிசிடிவி காட்சியையும் அனுப்பி வைத்தனர்.
ரயில்வே பாதுகாப்புப்படை குற்றத்தடுப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை வந்த வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் பெரம்பூர் - சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இடையே முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சோதனை செய்தபோது கேரள போலீசார் கொடுத்த அடையாளத் தகவலின் படி அதே நபர் ரயிலில் பயணம் செய்ததை உறுதி செய்தனர்.
சந்தேகத்தின்பேரில், சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரித்தபோது அவர் பிஸ்வாத்ஜி சர்கார் என்பதும் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து விட்டு போலீசாருக்கு பயந்து சென்னைக்கு தப்பி வந்ததையும் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தடியாட்டபரம்ப காவல் நிலையத்தில் இருந்து கொடுத்த தகவலின்படி பிஸ்வாத்ஜி சர்காரை கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க : பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் - நடவடிக்கை எடுக்காத காவல் துறை முற்றுகை