தோல் துறையின் திறன் மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலி வெளியீடு...!

author img

By

Published : Sep 20, 2022, 9:11 PM IST

தோல் துறையின் திறன் மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலி வெளியீடு...!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தோல் துறையின் திறன் மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலியை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

சென்னை: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎல்ஆர்ஐ) தோல் துறையின் திறன் மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலியை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார். தோல் தொழில் துறையில் பயிற்சி பெறுவோருக்கு வடிவமைத்தல் மற்றும் தயாரித்து அளிப்பதற்காக தோல் திறன் துறை கவுன்சில், இந்த செயலியை உருவாக்கியுள்ளது.

இந்த அமைப்பின் அலுவலகத்திலிருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டுடியோ மூலம் இணையதளம் வழியாக வகுப்புகள் நடத்தப்படும். தோல் தொழில் துறையில் ஆர்வம் உள்ள அனைத்து வயதினரும், இந்த ஸ்கேல் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டில் தோல் தொழில்துறை பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும், தற்போது 44 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் துறையில் பணியாற்றி வருவதாகவும் கூறினார். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை சரியான விகிதத்தில் கலந்து இந்தத் துறையின் வளர்ச்சிக்கு சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ முக்கிய பங்கு வகிப்பதை அவர் பாராட்டினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் அதிகரிப்பதன் காரணமாக இந்தத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பேசிய பிரதான், திறன் பெறுதல், மறு திறன் பெறுதல், திறனை மேம்படுத்துதல் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து புதுப்பித்துக் கொள்ள அழைப்பு விடுத்தார்.

இந்தத் துறையின் திறன் மேம்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய தேசிய திறன் மேம்பாட்டு கழகமும், சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ-யும் இணைந்து செயல்படவிருப்பதாக கூறிய அவர், இந்தத் துறையில் பணியாற்றுவோரின் திறன்களை விரிவுப்படுத்த தேசிய அளவில் திறன் கட்டமைப்பு திட்டத்தை சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ நடத்த வேண்டும் என்று யோசனை வழங்கினார்.

திறன் மேம்பாட்டு அமைச்சகம், சிஎல்ஆர்ஐ, தோல் தொழில் திறன் கவுன்சில், தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை உட்பட இந்தியா முழுவதும் பொதுவான 10 வசதி மற்றும் திறன் மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

2025-க்குள் 6 பில்லியன் கைவினைஞர்களை உருவாக்குவது என்ற இலக்கை எட்டுவதிலும் அவர்களின் திறனை மேம்படுத்துவதிலும் மாபெரும் பங்களிப்பை செய்யும் எனத் தெரிவித்தார். தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, தொழில் முனைவு ஆகியவற்றுக்கு ஊக்கம் அளித்து வேலையை உருவாக்குவோராக இந்தத் துறையின் இளம் தொழில்முறையினரை அவர் கேட்டுக் கொண்டார்.

இ - வர்த்தகம் உள்ளிட்ட டிஜிட்டல் வெளியில் கிடைக்கும் வாய்ப்புகளை கைவினைஞர்களோடு இணைத்து கைகோர்க்க வேண்டும் எனக் கூறினார். கூட்டுறவு மற்றும் குடிசை தொழிலாகவும் உள்ள தோல் தொழில் துறை வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப மேம்பாடுகளை சேர்த்து கொள்வது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

சிஎல்ஆர்ஐ போன்ற நிறுவனங்கள் திறன் மேம்பாடு அளிப்பதால் கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், மதிப்பும் உயர்கிறது என கூறினார். மத்திய தகவல், ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ”நாட்டில் தோல் தொழில் துறை வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ-யின் பங்களிப்புகளை எடுத்துரைத்தார்.

நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதி வருவாயில் தமிழ்நாடு தோல் தொழில்துறை சிறந்த பங்களிப்பை செய்திருப்பதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் திறன் வாய்ந்த ஏராளமான மனிதவளம் உள்ளதாகவும், இவர்களுக்கு திறன் அளிப்பதில் சிஎல்ஆர்ஐ மாபெரும் பங்களிப்பை செய்து வருகிறதாகவும் கூறினார்.

மேலும் இளைஞர்களிடையே தொழில் முனைவோரை சிஎல்ஆர்ஐ ஊக்கப்படுத்தி வருவதோடு பல புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் உதவி செய்கிறது என்றார். இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை நோக்கிய அமிர்த காலத்தில் நமது தேசிய இலக்குகளை நனவாக்க இது உதவும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.

இதையும் படிங்க: பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.