'நிலக்கரி தட்டுப்பாடு... தமிழ்நாட்டில் அவசர காலத் திட்டம் அவசியம்'

author img

By

Published : Oct 12, 2021, 11:53 AM IST

Updated : Oct 12, 2021, 12:07 PM IST

தமிழ்நாட்டில் நிலைமையை சமாளிக்க அவசர கால திட்டம் தேவை

தென் மாநிலங்களில் தமிழ்நாடு, வட மாநிலங்களில் மிகக் குறைந்த அளவே நிலக்கரி இருப்பு உள்ளதால், இன்னும் ஒரு சில நாள்களில் முழுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, கள நிலைமையை உணர்ந்துகொண்டு, மின்பற்றாக்குறை ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்கான அவசர காலத் திட்டத்தைத் தயாரித்து தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

சென்னை: நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படும் இடர் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகிவருகிறது. இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் நிலக்கரித் தட்டுப்பாடு அபாயக் கட்டத்தை எட்டிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன.

மின்னுற்பத்தி நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இருப்பதாகவும், கவலைப்பட எதுவுமில்லை என்றும் ஒன்றிய, மாநில அரசுகள் கூறிவந்தாலும்கூட, ஒன்றிய மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர்களை அழைத்து உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தியிருப்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும். இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும்.

ராமதாஸ் கோரிக்கை
ராமதாஸ் கோரிக்கை

தட்டுப்பாட்டுக்கு காரணம்

வெளிநாடுகளில் உற்பத்திக் குறைவு காரணமாக நிலக்கரி விலை கணிசமாக உயர்ந்திருப்பதும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக நிலக்கரி உற்பத்தியும், உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியை மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கொண்டுசெல்லும் பணியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதும்தான் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணமாகும்.

தட்டுப்பாட்டுக்கு காரணம்
தட்டுப்பாட்டுக்கு காரணம்

உலகின் பெரும்பாலான நாடுகளில் இதே நிலைதான் காணப்படுகிறது. நிலைமையை சமாளித்துவிட முடியும் என்று ஒன்றிய அரசு தொடர்ந்து கூறிவரும் போதிலும், கள நிலைமை வேறு விதமாக உள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள 135 அனல்மின் நிலையங்களில், சுமார் 80%, அதாவது 106 அனல் மின் நிலையங்களில் இருப்பில் உள்ள நிலக்கரி, ஐந்து நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என ஒன்றிய மின்சார ஆணையத்தின் இணையதள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அடுத்த சில நாள்களில்

அதுமட்டுமின்றி, மராட்டியத்தில் 13 அனல் மின் நிலையங்களும், பஞ்சாபில் மூன்று அனல் மின் நிலையங்களும் நிலக்கரித் தட்டுப்பாட்டால் மூடப்பட்டிருக்கின்றன. கேரளம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலக்கரித் தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல மாநில அரசுகள் அடுத்த சில நாள்களில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் நிலைமையைச் சமாளிக்கத் தயாராக இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளன. இதுதான் எதார்த்தமாகும்.

தமிழ்நாட்டில் 2.40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், 60,000 டன் நிலக்கரி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள மின்சாரத் துறை அமைச்சர், அதனால் தமிழ்நாட்டில் ஒரு வினாடிகூட மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாள்களில்
அடுத்த சில நாள்களில்

அமைச்சரின் விளக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தாலும்கூட, கள நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிலக்கரித் தட்டுப்பாடோ, அதனால் மின்சாரத் தட்டுப்பாடோ ஏற்பட்டால், அதைச் சமாளிப்பதற்கான திட்டத்தை வகுத்து தமிழ்நாடு அரசு தயாராக இருக்க வேண்டும்.

எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை

பன்னாட்டு அளவிலும், இந்திய அளவிலும் நிலவும் சூழல் தமிழ்நாட்டை இரு வகைகளில் பாதிக்கக்கூடும். முதலாவதாகத் தமிழ்நாட்டில் இருப்பில் உள்ள நிலக்கரி நான்கு நாள்களுக்கு மட்டுமே போதுமானதாகும். தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி வந்துகொண்டிருந்தாலும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், நிலக்கரி வரத்து எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை.

எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை
எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை

நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் இன்றைய நிலையில் நான்கு கோடி டன் நிலக்கரி உள்ளது. இது இயல்பான சூழலில் 22 நாள்களுக்கு போதுமானது. ஆனால், இன்றைய சூழலில் இந்த நிலக்கரியை உரிய காலத்தில் மின் நிலையங்களுக்கு கொண்டுசெல்வதில் சிக்கல் உள்ளது. இந்தச் சிக்கல் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும்பட்சத்தில் அடுத்த சில நாள்களில் தமிழ்நாட்டிலும் நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அடுத்ததாக நிலக்கரிப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளைவிட, நேரடி மின்சாரப் பற்றாக்குறையால் இன்னும் கூடுதலான பாதிப்புகள் ஏற்படும். தனியார் மின் நிறுவனங்கள் பெரும்பாலும் இறக்குமதி நிலக்கரியை நம்பியுள்ளன. நிலக்கரி இறக்குமதி குறைந்துவிட்டதால் தனியார் நிறுவனங்களின் மின்சார உற்பத்தி பெரிதும் குறைந்துவிட்டது.

இதே நிலை எப்போதும் நீடிக்காது

அதனால் தனியாரிடமிருந்து சராசரியாக 4000 மெகாவாட்டுக்கும் கூடுதலான மின்சாரத்தை வாங்கிக்கொண்டிருந்த தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது 1500 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரத்தையே கொள்முதல்செய்கிறது.

இதே நிலை எப்போதும் நீடிக்காது
இதே நிலை எப்போதும் நீடிக்காது

அதனால் ஏற்படும் பற்றாக்குறையை காற்றாலை மின்சாரம்தான் ஈடு செய்கிறது. வழக்கமாக காற்றாலை மின்னுற்பத்தி அக்டோபர் மாதத் தொடக்கத்தில் குறைந்துவிடும். ஆனால், நல்வாய்ப்பாக காற்றாலை மின்சாரம் இப்போதும் அதிகமாகக் கிடைக்கிறது.

நேற்றுகூட 6 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் கிடைத்துள்ளது. இதேநிலை எப்போதும் நீடிக்காது. ஒருவேளை அடுத்த சில நாள்களில் காற்றாலை மின்னுற்பத்தி குறைந்தாலும், தனியார் நிறுவனங்கள் வழங்கும் மின்சாரம் குறைந்தாலும் தமிழ்நாடு மின் தட்டுப்பாட்டை சந்திக்கும் ஆபத்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

கள நிலைமையை உணர்ந்து

எனவே, கள நிலைமையை உணர்ந்துகொண்டு, மின்பற்றாக்குறை ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்கான அவசர காலத் திட்டத்தைத் தயாரித்து தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதை தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின் வாரியமும் உறுதிசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நிலக்கரி தட்டுப்பாடு: மின் தடை ஏற்பட அதிக வாய்ப்பு

Last Updated :Oct 12, 2021, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.