'ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்' நூதன முறையில் இளம்பெண் ஏமாற்றம்.. பஞ்சாப் இளைஞர்கள் கைது!

author img

By

Published : Jan 23, 2023, 6:12 PM IST

Etv Bharat

சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணிடம், 'உன்னை உனது காதலனுடன் சேர்த்து வைக்கிறோம்' என கூறி 40 சவரன் தங்க நகைகளை இணையதளம் மூலம் ஏமாற்றி மோசடி செய்த பஞ்சாப் இளைஞர்களை சென்னை விமான நிலைய காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண், காதலில் தோல்வி அடைந்திருக்கிறார். இவர், எதார்த்தமாக இணையதளங்களில் நேரத்தை செலவு செய்துகொண்டிருந்தபோது அவருக்கு ஒரு செயலி (App) அறிமுகமாகியுள்ளது. அது, “ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்” என்ற செயலி தான். காதலில் தோல்வியடைந்த அல்லது காதல் நிறைவேறாத இளைஞர்களுக்கு உதவி செய்வதாக அந்த செயலி குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த இளம்பெண் அந்த இணையதள செயலியில் தனது பெயரை பதிவுசெய்து தனது காதலன் பற்றியே விவரங்களையும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த இளம்பெண்ணை இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட இரண்டு பேர், சென்னை விமான நிலையம் வரும்படி கூறினர். அந்த இளம் பெண்ணும் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார்.

அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், “நாங்கள் உங்கள் காதலரோடு சேர்த்து வைத்து விடுகிறோம். ஆனால் கொஞ்சம் செலவு அதிகமாகும்” என்று பணம் அல்லது தங்க நகை கேட்டுள்ளனர். அந்த இளம்பெண் தன்னிடம் இருந்த 40 சவரன் தங்க நகைகளை சென்னை விமான நிலையத்தில் வைத்து அவர்களிடம் கொடுத்திருக்கிறார்.

தங்க நகைகளை வாங்கிச் சென்ற அந்த இரண்டு இளைஞர்கள், அவர்கள் கூறிய நாட்களுக்குள் இளம் பெண்ணை காதலனோடு சேர்த்து வைக்கவில்லை. இதற்கு மாறாக அந்த இளைஞர்கள் இந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு “நீ கொடுத்த நகைகள் போதுமானது அல்ல; மேலும் ரூபாய் ஐந்து லட்சம் பணம் வேண்டும், இல்லையென்றால் உன்னை பற்றி அவதூறாக இணையதளங்களில் செய்திகளை பரப்பி விடுவோம்” என்று மிரட்டினர்.

இதனால் பதறிப்போன இளம்பெண், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். அதன் பின்பு சென்னை விமான நிலைய காவல் நிலையம் வந்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீரோடு புகார் எழுதிக் கொடுத்தார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இணையதள முகவரியை ஆய்வு செய்தபோது அது பஞ்சாப் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. எனவே காவல் துறையினர், அந்த இளம்பெண்ணை வைத்து அந்த இளைஞர்களை தொடர்பு கொள்ள செய்தனர்.

அந்த இளம்பெண் அந்த இளைஞர்களிடம் ஏற்கனவே நான் நகைகளை கொடுத்த அதே சென்னை விமான நிலையத்திற்கு வந்தால் நீங்கள் கேட்ட பணம் நான் கொடுக்கிறேன் என்று பேசினார். அந்த இளைஞர்களும் அதற்கு சென்னை வருவதாக கூறினார். அந்த இளைஞர்கள் இருவரும் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர். காவல் துறையினரும், சென்னை விமான நிலையத்தில் இளம்பெண்ணை தனியே நிறுத்தி அந்த இளைஞர்களிடம் பேசச் செய்தனர்.

அதோடு சாதாரண உடை அணிந்த காவல் துறையினர், பயணிகள் போல் நடித்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். இளம்பெண் பணம் தரப் போகிறார் என்ற சந்தோசத்தில் இருந்த பஞ்சாப் இளைஞர்களை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அனில் குமார் (27), ககன்தீப் பார்கவ் (33) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர்கள் இதைப்போல் இந்த போலியான இணையதளத்தை தொடங்கி, பல இளம்பெண்களையும், இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து 8.5 லட்சம் ரூபாய் பணம், 54 கிராம் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அதன் பின்பு இரண்டு பேர் மீதும் சென்னை விமான நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காவல் துறையினர், இவர்கள் இருவரையும் விரைவில் காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 2வது கல்யாணம் ஆன மூன்றாவது நாளே பெண் தற்கொலை.. கணவன் உள்ளிட்ட குடும்பத்தார் மீது வன்கொடுமை வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.