பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : Jun 23, 2022, 7:25 PM IST

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் 2ஆம் ஆண்டில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பினை முடித்தவர்கள், இந்தாண்டு முதல்முறையாக 2ஆம் ஆண்டில் நேரடியாக சேர்க்கப்படவுள்ளனர். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு முடிந்தபின்னர், ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் காலி இடங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.

அந்தக் காலி இடங்களில் அண்ணா பல்கலைக்கழத்தினை தவிர, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ஆம் ஆண்டில், பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் கலந்தாய்வு மூலம் பிஇ, பிடெக் படிப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் சேர்க்காமல் அந்த இடங்கள் 4 ஆண்டுகளும் காலியாகவே வைக்கப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் 2014-15ஆம் ஆண்டில் 324 இடங்கள், 2015-16ஆம் கல்வியாண்டில் 290 இடங்கள், 2016-17ஆம் கல்வியாண்டில் 294 இடங்கள், 2017-18ஆம் கல்வியாண்டில் 284 இடங்கள், 2018-19ஆம் கல்வியாண்டில் 175 இடங்கள், 2019-2020ஆம் கல்வியாண்டில் 389 இடங்கள், 2020-2021ஆம் கல்வியாண்டில் 570 இடங்கள் காலியாக இருந்தன.

2021-22 நடப்பு கல்வியாண்டில் 421 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் காலி இடங்களை நிரப்பும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள், பொறியியல் படிப்பில் 2ஆம் ஆண்டில் இந்த ஆண்டு முதல்முறையாக நேரடியாக சேர்க்கப்படவுள்ளனர்.

இதுகுறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தகுதிவாய்ந்த டிப்ளமோ பட்டயப்படிப்பு மற்றும் பி.எஸ்சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியற் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழகத்துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் 2022-23ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கத் தேவையான நெறிமுறைகள் :

www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in என்ற இணையதளம் மூலமாக, வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவுக் கட்டணம் 300 ரூபாய் விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.

இணையதளம் வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், “The Secretary, Second year B.E./B.Tech. Degree Admissions – 2022-23, ACGCET, Karaikudi” payable at Karaikudi” என்ற பெயரில் 24.6.2022 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFC) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம். SC/SCA/ST பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பதாரர்கள் வங்கி வரைவோலையை சமர்ப்பிப்பதற்கும், இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை (TFC) பயன்படுத்திக்கொள்ளலாம். அனைத்து மையங்களிலும் போதிய அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கல்வியாண்டில் Second Year B.E./ B.Tech. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் மூலமாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in ஆகிய இணையதள முகவரியில் “INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES” பக்கத்திலும், 04565-230801, 04565-224528 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.