ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிடுக - ராமதாஸ்

author img

By

Published : May 10, 2022, 6:20 PM IST

pmk founder Ramadoss insisted that decision to raise property taxes every year should be dropped ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்

2017ஆம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்ட போது அதைக் கண்டித்து இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று போராட்டம் நடத்தினார். அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரியை உயர்த்துவது என்ன நியாயம்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: ஆண்டுதோறும் சொத்துவரியினை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்களானது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசானது முடிவு செய்துள்ளது. அது தொடர்பான சட்ட முன்வடிவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு சட்டப்பேரவையில் நேற்று (மே.9) தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று (மே.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புறங்களிலும் சொத்து வரியை ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்த வகை செய்யும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகிறது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு

ஆண்டுக்கு ஆண்டு சுமை: சொத்துவரி உயர்வு வீட்டு உரிமையாளர்களை மட்டுமின்றி வாடகைதாரர்களையும் கடுமையாக பாதிக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் அண்மையில் தான் 200% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதையே செலுத்த முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், ஆண்டுக்கு ஆண்டு இத்தகைய சுமையை தமிழ்நாட்டு மக்களால் சுமத்த முடியாது.

வரியை உயர்த்துவது என்ன நியாயம்?: 2017-18 ஆம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்ட போது அதைக் கண்டித்து இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே தலைமையேற்று போராட்டம் நடத்தினார். அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரியை உயர்த்துவது என்ன நியாயம்?

சொத்து வரி உயர்வு
சொத்து வரி உயர்வு

உரிமைகளை மறுக்கும் அரசு: கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரை (திமுக தேர்தல் வாக்குறுதி - 487) சொத்துவரி உயர்த்தப்படாது என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. பொருளாதார நிலையை காரணம் காட்டி மக்களுக்கான உரிமைகளை மறுக்கும் அரசு வரியை மட்டும் உயர்த்துவது சரியா?

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் நிலை குலைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் மீது மேலும், மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு: எவ்வளவு அதிகம்...? என்னென்ன மாற்றம்...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.