அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் - மாற்றத்துக்கான ஒரு நல்ல வாய்ப்பு

author img

By

Published : Sep 23, 2021, 11:34 AM IST

அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ்

அரசுப் பேருந்துகளில் கடிதம் மற்றும் பார்சல் சர்வீஸ் மூலம் நஷ்டத்திலிருந்து போக்குவரத்துத் துறையை மீட்க முடியும். இதுகுறித்த ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்.

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கிப்போய் உள்ளன. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7ஆயிரத்து 984 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத் துறையில் மொத்தம் 19,200 பேருந்துகள் இயங்கி வருகிறன. சென்னையில் 2,250 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய போக்குவரத்துக் கழகம் மூலம் 15,627 சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலைப்பகுதிகளில் 498 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 702 குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகள் உள்ளன.

அரசு பேருந்தில் பார்சல் சர்வீஸ்

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் உள் மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு அஞ்சல் நிலையம்போல் போக்குவரத்துத் துறையைப் பயன்படுத்தி துரிதமாகவும் விரைவாகவும் கடிதம் மற்றும் பார்சல்களை மக்களிடையே கொண்டு சேர்க்க முடியும். பார்சல் சர்வீஸ் மேற்கொள்வதற்கு என்று தனியாக ஒரு செலவு செய்ய வேண்டுமென்று அவசியமில்லை. தினசரி செல்லும் பேருந்துகளில், குறைந்த விலையில் கடிதங்கள் மற்றும் பார்சல்களை அனுப்பி வைக்க முடியும். இதனால் அரசுக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அஞ்சல் நிலையம்

தற்போது அஞ்சல் நிலையத்தில் 50 கிராம் எடையுள்ள கடிதத்தை, நகரங்களுக்குள் கொண்டு சேர்க்க 18 ரூபாயும், 200 கிலோமீட்டருக்கு மேல் கொண்டு சென்றால் 41 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. 5 கிலோ பார்சல் 200 கிலோமீட்டருக்கு மேல் கொண்டு செல்ல 637 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

தனியார் கொரியர் சர்வீஸ்

ஒரு கிலோ எடையுள்ள பார்சல் மாநகரத்திற்குள் கொண்டு செல்ல 55 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. 5 கிலோ பார்சல் கன்னியாகுமரிக்கு கொண்டு செல்ல 651 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இப்படியாக பார்சலின் கிலோவும், தூரமும் அதிகரித்தால் அதற்கேற்றாற்போல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தனியார் கொரியர் மற்றும் அஞ்சல் துறை இதற்கென்று தனியாக வாகனம் அமைத்து பார்சல் சர்வீஸ்களை மேற்கொள்வதால் விலை சற்று அதிகமாக உள்ளது.

தனியார் பேருந்தில் பார்சல் சர்வீஸ்

தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் செய்யப்படுகிறது. வாகனங்கள் முதற்கொண்டு டெலிவெரி செய்யப்படுகிறது. இதன் மூலம் தனியார் பேருந்து நிறுவனம் நல்ல வருமானம் ஈட்டி வருகிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு இருசக்கர வானத்தை எடுத்து வர 3,000 ரூபாய் குறைந்தபட்சம் வசூலிக்கப்படுகிறது.

ரயில்வே துறையில் பார்சல் சர்வீஸ்

அஞ்சல் மற்றும் ரயில்வே துறை இணைந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்சல் சர்வீஸ் மேற்கொள்ளப்படுகிறது.

பார்சல் சர்வீஸ் மேற்கொள்ளும் வழிமுறைகள்

தமிழ்நாடு முழுவதிலும் இ-சேவை மையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளன. இவற்றின் உதவியோடு பொதுமக்களிடம் இருந்து கடிதங்கள் மற்றும் பார்சல்களை பெற்றுக்கொள்ள முடியும். பொதுமக்களும் தங்களுக்கு எளிதாக வந்து செல்லும் இடமாக இது அமைகிறது. அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் மேற்கொண்டால், விரைவாகவும், தடையின்றி சேவைகளை வழங்க முடியும். அரசுப் போக்குவரத்தில் பலமே தொடர்ச்சியான இயக்கம் தான். சுமார் 19,000 பேருந்துகள் ஒரு நாளைக்கு இயக்கப்படுவது என்றால் பார்சல் சர்வீஸ் மூலம் 4,50,000 ரூபாய் அரசுப் போக்குவரத்திற்கு வருமானம் கிடைக்கும்.

மாதத்திற்கு குறைந்தது ஒரு கோடிக்கும் மேல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கு அதிகப்படியான பணியாட்கள் தேவை ஏற்படாது.

விளம்பரங்கள் மூலம் வருமானம்

விளம்பரப்படுத்துதல் என்பது மிக இன்றியமையாதது. சென்னை மெட்ரோ ரயிலில் விளம்பரங்கள் மூலம் வருமானத்தை அதன் நிர்வாகம் ஈட்டி வருகிறது. இதேபோல் அரசுப் பேருந்துகளில் விளம்பரம் வைப்பதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும். பழைய பேருந்துகள் சிலவற்றை முழுமையான விளம்பரத்திற்குப் பயன்படுத்தலாம்.

அரசுப் பேருந்துகளில் சில மாற்றங்கள்

அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ்-க்கு ஏற்றவாறு அமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கு என்று பெரிய செலவு ஆகாது. இதன் மூலம் கடிதங்கள் மற்றும் பார்சல்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல முடியும்.

போக்குவரத்துத் துறையை மீட்க முடியும்

இதுகுறித்து போக்குவரத்து தனியார் தொண்டு அமைப்பைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகையில், "புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பல்வேறு மாவட்டங்களில் புதிய தடங்களை உருவாக்கி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. பல்வேறு துறைகளில் மாற்றங்கள் செய்து வரும் அரசு, போக்குவரத்துத் துறையிலும் மாற்றம் கொண்டு வருகிறது.

ஆனால் அது மக்கள் எதிர்பார்ப்புக்கு ஈடு செய்ய முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அலுவலர்களுக்கு ஏற்றால் போல் இத்துறை செயல்படாமல் மக்கள் தேவைக்கான சேவையாக செயல்பட வேண்டும். கிராமப்புறங்களில் சில காலங்களுக்கு முன்பு விவசாய பொருள்கள், இடு பொருள்களைப் பேருந்துகளில் கடைசி இருக்கைகளில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது அரசுப் பேருந்துகளில் விவசாய இடுபொருட்கள் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் தயக்கம் காரணமாகத் தான் பேருந்துகளில் கடிதம் மற்றும் பார்சல் சர்வீஸ் மேற்கொள்ளவில்லை. மக்களின் நம்பிக்கை தன்மை போய் விடுமோ என்ற அச்ச உணர்வு அரசுக்கு இருப்பதாகத் தெரிகிறது. இவற்றை எல்லாம் களைந்து அரசுப் பேருந்துகளில் கடிதம் மற்றும் பார்சல் சர்வீஸ் என்பது ஒரு மாற்றத்துக்கான ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. இதன் மூலம் நஷ்டத்திலிருந்து போக்குவரத்துத் துறையை மீட்க முடியும்" என்றார்.

இதையும் படிங்க: கோட்டாபயவின் அறிவிப்பு ஏமாற்று நாடகமே - பழ.நெடுமாறன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.