அரசு அலுவலர்களுக்கு அடிப்படைப் பயிற்சி: பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைப்பு

author img

By

Published : Nov 29, 2021, 5:22 PM IST

அரசு அலுவலர்களுக்கு அடிப்படைப் பயிற்சி தொடக்கம்

சென்னையில் அரசு அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சியினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தார்.

சென்னை: புதிதாகப் பணியில் சேரும் அரசுப் பணியாளர்களுக்கும், அடிப்படைப் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கும் பவானி சாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் 41 பணி நாள்கள் கொண்ட அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. கரோனா நோய்த்தொற்று காரணமாக 2020 மார்ச் 17ஆம் தேதிமுதல் இந்த அடிப்படைப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்திற்கு மேல் நிலுவை ஏற்பட்டது. இந்த விவரம் அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பயிற்சி வழங்கி தகுதிகாண்பவரும் பூர்த்திசெய்யப்பட வேண்டுமெனவும், இதன்மூலம் அவர்கள் பதவி உயர்விற்கு வழிவகுக்கும் என்ற நோக்கில் உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் 37 பணி நாள்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சியினை வழங்கலாம் எனச் சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் தெரிவித்தார்.

அண்ணா நிர்வாகப் பணியாளர்கள் கல்லூரி, பவானி சாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் ஆகியவை பயிற்சி துறைத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பயிற்சி நிலையங்களாகும்.

இந்தப் பயிற்சி நிலையம் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 813 பயிற்சியாளர்களுக்குப் பல்வேறு அணிகளாகப் பயிற்சி வழங்கப்பட்டு பதவி உயர்வு வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளது. இதில் துணை ஆட்சியர், கணக்கு அலுவலர், உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) ஆகிய பல்வேறு துறை அலுவலர்களைக் கொண்டு அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொதுமக்கள் தொடர்பு, கணக்கு, ஊரக வளர்ச்சி, கணினி போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்தப் புதிய பயிற்சித் திட்டத்தின் மூலம் வருகைபுரிந்து பெண் பணியாளர்கள் விடுதியில் தங்காமல் வீட்டிலிருந்து தினமும் வருகைபுரிந்து வகுப்புகளில் கலந்துகொள்வதால் இத்திட்டம் மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் முதற்கட்டமாக இந்தச் செயலாக்கத்திற்கு சென்னை மாவட்டம் தெரிவுசெய்யப்பட்டு மொத்தம் 250 அரசுப் பணி பயிற்சியாளர்களுக்கு இன்று (நவம்பர் 11) சென்னை, அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ண சாமி மகளிர் கல்லூரியில் பழனிவேல் தியாகராஜன் மூலம் பயிற்சி தொடங்கிவைக்கப்பட்டது. இதில் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: இந்திய அளவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; பயமே வருகிறது - ஸ்டாலினின் 'நம்பர் 1' அக்கறை!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.