படிப்பினை முடித்த மருத்துவர்களுக்கான பயிற்சியை உடனடியாக வழங்குக... ஓபிஎஸ்...

author img

By

Published : Oct 1, 2022, 3:16 PM IST

OPS  ops urges for doctor training  doctor training  training for doctor  ops statement  o paneerselvam  மருத்துவர்களுக்கான பயிற்சி  ஓபிஎஸ் வலியுறுத்தல்  ஓபிஎஸ்  ஓபிஎஸ் அறிக்கை  மருத்துவ பயிற்சி  மருத்துவக் கல்லூரி  உக்ரைன்  பிலிப்பைன்ஸ்  ரஷ்யா  ரஷ்யா உக்ரைன் போர்  Foreign Medical Graduation Examination

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பினை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய மருத்துவர்களுக்கான பயிற்சியை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்திடுக என்று தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: இதுதொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வேண்டுமென்றால், அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றிப் பாதுகாத்தல் மிக அவசியமாகும். ஏனென்றால், மக்களின் நலம் தான் ஒரு நாட்டின் உடைய எதிர்காலத்தை முடிவு செய்கிறது. ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய மக்களின் நலனை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மருத்துவர்களுக்கான பற்றாக்குறை இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், அதிக மருத்துவர்களை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மருத்துவக் கல்வியை பயில வேண்டும் என்ற ஆர்வம் பலரிடம் இருந்தாலும், அனைவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி படிக்கும் அளவுக்கு பெரும்பாலானோரிடம் வசதி வாய்ப்புகள் இல்லை.

இதற்கு நீட் தேர்வு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. எனவே, குறைந்த செலவில் மருத்துவக் கல்வியை பயிற்றுவிக்க பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ரஷ்யா, சீனா, உக்ரைன், பிலிப்பைன்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். சமீப காலமாக இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தச் சூழ்நிலையில் கரோனா தொற்று காரணமாக நேரில் சென்று மருத்துவம் பயில முடியாத நிலையும், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் காரணமாக மருத்துவப் படிப்பையே தொடர முடியாத சூழ்நிலையும் மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்படி அயல்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சிகால உதவித் தொகை குறித்த விவரங்களை அனுப்புமாறு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களும் இது தொடர்பாக விரிவான பேட்டி ஒன்றினை ஜூலை 29 அன்று அளித்திருந்தார்கள். இந்தப் பேட்டி அளித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்தக் கோப்பிற்கான ஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை என்றும், இதற்கான கோப்பு நிதித் துறையில் நிலுவையில் உள்ளதாகவும், பிற மாநிலங்களில் உள்ள அயல்நாட்டு மருத்துவ மாணவர்கள் எல்லாம் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் மேற்படி பயிற்சி காலதாமதப்படுத்தப்படுவது தங்களுக்கு மன வருத்தத்தை அளிப்பதாகவும் மாணவ, மாணவியர் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பயிற்சி உடனடியாக துவங்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அயல்நாட்டு மருத்துவ மாணவ, மாணவியரிடையே இருக்கிறது. தற்போது ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் Foreign Medical Graduation Examination-ல் தேர்ச்சி பெற்றுவிட்டு, இரண்டு ஆண்டு பயிற்சிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அயல் நாடுகளில் மருத்துவம் பயின்று பயிற்சிக்காக காத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஏழையெளிய, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்கள் என்பதையும், அவர்களின் மருத்துவப் படிப்பு ஏற்கெனவே காலதாமதமாகி விட்டது.

இதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, நிதித் துறையில் நிலுவையில் உள்ள கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அவர்களுக்கான மருத்துவப் பயிற்சியை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த திமுகவினர்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.