'தமிழ்நாட்டுல இருக்குற பாதி நீதிமன்றங்கள் நீரில் தான் கட்டப்பட்டுள்ளன' - சீமான்

author img

By

Published : May 9, 2022, 6:41 PM IST

Updated : Jun 27, 2022, 12:54 PM IST

Naam Tamilar Katchi

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்த உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சீமான், ’இங்கே இருக்கிற பாதி நீதிமன்றங்கள் நீரில் தான் கட்டப்பட்டுள்ளன’ என விமர்சித்துள்ளார்.

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 250 வீடுகள் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில் வீடுகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர்.

அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பொதுப்பணித்துறை அலுவலர்கள் காவல் துறை அலுவலர்களின் உதவியுடன் வீட்டை அகற்றும் பணியை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 5 நாள்கள் பணி நடைபெற்றுக்கொண்டு வந்த நிலையில் நேற்று (மே 8) கண்ணையன் என்ற முதியவர் தீக்குளித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று (மே 9) உயிரிழந்தார். இவரின் இழப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்வு குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து உயிரிழந்த கண்ணையன் மனைவிக்கு ஆறுதல் கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “இவ்வளவு காலமாக எல்லா உரிமைகளையும் இந்த பகுதிமக்களுக்கு கொடுத்துவிட்டு தற்போது எப்படி மக்கள் இருக்கும் இடத்தை இடிப்பார்கள்.

ஒரு வியாபாரிக்கு பிரச்னையாக இருக்கு என்று இந்த இடத்தை இடிக்கின்றனர். முதலமைச்சர் மாற்று இடம் கொடுத்தாலும் இந்த இடத்திற்கு என்ன குறைச்சல். இந்த இடம் ஆக்கிரமிப்பே கிடையாது. நீதிமன்றம் நிறைய தீர்ப்பு கொடுக்கிறது. அதை அரசு செயல்படுத்தி இருக்கிறதா?

தமிழ்நாடு அரசு சார்பில் இந்த வழக்கை சரியாக நடத்தவில்லை. அரசு, தானே இந்த இடத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் நிலத்தை நீதிமன்றம் உத்தரவின்படி இடித்தார்களா? இங்கே கேட்க ஆளில்லை என்று இடிக்கிறார்களா? பாதி நீதிமன்றங்கள் நீரில் தான் கட்டப்பட்டுள்ளன.

வழக்கு தொடுத்த வியாபாரி நிலமும் கபாலீஸ்வரர் கோயில் நிலம் என்று தெரிவிக்கிறார்கள். இதை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்ய வேண்டும். இவர்களுக்கு மாற்றாக பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம் என்று பகுதிகளில் வீடு கொடுப்பது ஏற்புடையது அல்ல. முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு - நடந்தது என்ன?

Last Updated :Jun 27, 2022, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.