மாணவனை நிர்வாணப்படுத்தி சக மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறும் விவகாரம்; சாட்சிகள் ஏதும் இல்லை - காவல்துறை

author img

By

Published : Nov 25, 2022, 9:30 AM IST

மாணவனை நிர்வாணப்படுத்தி சக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்

10 ஆம் வகுப்பு மாணவனை நிர்வாணப்படுத்தி சக மாணவர்கள் தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு போதிய சாட்சிகள் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை: எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 15 வயது சிறுவன், கே.கே நகரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாண்டிச்சேரியில் படித்து வந்த சிறுவன் கடந்த 5 மாதத்திற்கு முன்பு சென்னைக்கு குடிபெயர்ந்து இந்த பள்ளியில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

பள்ளியில் சிறுவனின் மொழி மற்றும் பாவனையை 10-க்கும் மேற்பட்ட சக மாணவர்கள் கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் சிறுவனுக்கும் சக மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சிறுவனை சக மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவனின் தந்தை நாடக கலைஞர் என்பதால் அவரின் தொழிலையும், மாணவனின் தாயையும் கொச்சைபடுத்தி சக மாணவர்கள் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுவன் அளித்த தகவலின் பேரில் சிறுவனின் தந்தை ஆசிரியர்களிடம் புகார் செய்ததால், சக மாணவர்களை ஆசிரியர்கள் எச்சரித்து உள்ளனர். இந்நிலையில் சிறுவன் ஆசிரியர்களிடம் புகார் செய்ததால் ஆத்திரமடைந்த 15 சக மாணவர்கள் கடந்த 21ஆம் தேதி பள்ளி முடிந்ததும், சிறுவன் வெளியே வந்த பிறகு அவனை தாக்கி அரை நிர்வாணமாக்கி அவனது பிறப்புறுப்பில் தாக்கி கொடூர செயலில் சக மாணவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்த சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகார் தொடர்பாக நேற்று(நவ.24) பள்ளி வளாகத்திற்கு சென்ற உதவி ஆணையர் மற்றும் கேகே நகர் காவல் ஆய்வாளர் பிரபு ஆகியோர் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள மாணவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், புதுச்சேரியில் படித்து வந்த மாணவனை பாதியிலேயே நிறுத்திவிட்டு மீண்டும் பத்தாம் வகுப்பில் அவரது தந்தை சேர்த்துள்ளார். தந்தையின் வேலை நிமித்தமாக இடம் மாறுதல் வழங்கப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் புதிதாக உள்ள சூழலை பாதிக்கப்பட்ட மாணவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் சக மாணவருடன் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறிய புகார்கள் அந்த கல்வி நிலைய வளாகத்திற்குள் நடக்க வாய்ப்பு இல்லை எனவும், பள்ளி முடிந்தவுடன் அனைவரையும் வெளியேற்றி விடுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சாதாரண உடையில் மோதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 மாணவர்களிடமும் காவல்துறை உயர் அதிகாரி விசாரணை மேற்கொண்டார். ஆனால் அந்த மாணவர்களும் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவனை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு போதிய முகாந்திரம் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவனின் உடல்நிலை குறித்து போலீஸ் விசாரணை செய்த போது மாணவனை தாக்கியதற்கான காயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கை வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்களும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என்பதால் குழந்தைகள் நல ஆணையத்திடம் இந்த விவகாரம் தொடர்பாக கூறப்பட்டிருப்பதாகவும், குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரைக்கும் அடிப்படையில் வழக்கு பதிவு செய்வதா? அல்லது இரண்டு தரப்பு மாணவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொது வரை இந்த விவகாரத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பின்னணி பாடகி சின்மயி மாணவனுக்கு நடந்ததாக கூறப்படும் விவரங்களை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். சிறுவர்கள் தொடர்பான தகவல்களை வெளியே கூறும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் எனவும், இதுபோன்று ஒருவர் கூறியதை அப்படியே ஆய்வு செய்யாமல் வெளியிடுவது தவறு என காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பதற்றமான வழக்குகளை காவல்துறை விசாரணை நடத்தும் போது பரபரப்பை ஏற்படுத்தவும், வழக்கின் விசாரணையை மாற்றும் வகையிலும் தனி நபர்கள் தகவல்களை வெளியிடுவதும் தவறுதான் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கரூர்: தனியார் பள்ளி மாணவன் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.