சென்னை பல்கலைக்கழக வேந்தர் தேடுதல் குழு விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை பல்கலைக்கழக வேந்தர் தேடுதல் குழு விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
பல்கலைக்கழகத்தின் எந்தெந்த ஆராய்ச்சி திட்டங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி பெறப்படுகிறது என விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக தேடுதல் குழுவை நியமித்து, தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்தக் குழுவினர் மூன்று பேரை தேர்ந்தெடுத்து பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்தக் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை சேர்க்கவில்லை எனக் கூறி, தேடுதல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் B.ஜெகன்னாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, வேந்தர் பதவி வகிப்பவரை மாற்ற இருப்பதாகவும், எந்தெந்த திட்டங்களுக்கு யுஜிசி நிதி உதவி பெறப்படுகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அரசு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, துணை வேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்ப்பது பற்றிய இந்த வழக்கில், வேந்தர் பதவி குறித்து தாங்கள் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்ததுடன், தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
