இட ஒதுக்கீட்டின்கீழ் பணி நியமனம்: மதம் மாறிய ஊழியர்களைக் கண்டறிந்தால் உடனடி பணிநீக்கம்

author img

By

Published : Jun 2, 2021, 6:56 AM IST

இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம்

சென்னை: பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டின்கீழ் பணி நியமனம் பெறுவதற்காக, மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாமல் நூலக உதவி தொழில்நுட்ப அலுவலராக நியமிக்கப்பட்டு, பின்னர் தொழில்நுட்ப அலுவலராகப் பதவி உயர்வு பெற்ற கவுதமன் என்பவரின் நியமனத்தையும், பதவி உயர்வையும் ரத்துசெய்யக் கோரி ரமேஷ், ராம்குமார், கனகராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தனது கல்வித்தகுதி சான்றிதழை பல்கலைக்கழக விசாரணையின்போது கவுதமன் தாக்கல்செய்யவில்லை என்றும், உரிய கல்வித் தகுதி பெறாத அவரது நியமனமும், பதவி உயர்வும் சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.

தகுதியில்லாத கவுதமனை பதவி உயர்வு பெற அனுமதித்த பல்கலைக்கழகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவரை நியமனம் செய்ய பரிந்துரைத்த தேர்வுக் குழுவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார்.

கடும் நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனம் செய்யும்போது வெளிப்படைத்தன்மையைப் பின்பற்ற வேண்டும் எனவும், கல்வி நிறுவனங்கள் பணி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வுக்கு முன், விண்ணப்பதாரர் பெயர், கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களின் அறிவிப்புப் பலகை, இணையதளங்களில் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பணியாளர் தகுதி குறித்த கேள்வி எழும்போது, அது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், நேர்முகத்தேர்வு முழுவதையும் காணொலியாகப் பதிவுசெய்ய வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

விண்ணப்பதாரர்கள் யாரேனும் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டால் அதனை விரைந்து ரத்துசெய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு வழங்கிய ஊதியத்தை தேர்வுக் குழு உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

உடனடி பணிநீக்கம்

போலி ஆவணங்கள் அல்லது சான்றுகள் அளித்து விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்ந்து இருப்பதாகக் கண்டறிந்தால் அவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்களை அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இட ஒதுக்கீட்டின்கீழ் பல்கலைக்கழகங்களில் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.