"டெங்குவால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமே" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

"டெங்குவால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமே" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
Dengue Fever: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அனைவரும் நலமுடன் உள்ளதாகவும், தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: உயிர் காக்கும் உன்னத சேவையில் 108 ஆம்புலன்சின் 15வது ஆண்டு விழா ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “டெங்குவால் இந்த ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 3,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 300 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
-
ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் உயிர் காக்கும் உன்னத சேவையில் 108ன் 15 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister pic.twitter.com/E1WwXa3SUD
— Subramanian.Ma (@Subramanian_ma) September 15, 2023
அவர்கள் அனைவருமே நலமுடன் உள்ளனர். தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே லேசான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளோம். அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கற்க உள்ளனர்.
கட்டடங்களில் தேங்கும் நீரை அப்புறப்படுத்தப்படுவதை உறுதி செய்ய பொதுப்பணித்துறை, மாநகராட்சி , வீட்டு வசதி உள்ளிட்ட துறை அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொசு ஒழிப்பு பணிகளில் உள்ளாட்சி நிர்வாகத்தை தீவிர நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம்.
திருவாரூரில் பயிற்சி மருத்துவ மாணவி இறப்பிற்கு டெங்குவோ, டைபாய்டோ காரணம் அல்ல. காரணத்தைக் கண்டறிய ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆனால், அந்த மாணவி ஏற்கனவே நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளார்.
மேலும், நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எல்லையோர மாவட்டங்களில் தீவிரப்படுத்தி உள்ளோம். நிபா அச்சுறுத்தல் தமிழ்நாட்டில் இல்லை. டெங்குவைப் பொறுத்தவரை எந்த மாவட்டத்திலும் தீவிர பாதிப்பு இல்லை. டெங்கு கட்டுக்குள் உள்ளது. தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
