தனியார் கல்வி நிறுவனங்கள் விளம்பரம் செய்வதை அரசு தடை செய்ய வேண்டும்...

author img

By

Published : Oct 5, 2022, 8:50 PM IST

தனியார் கல்வி நிறுவனங்கள் விளம்பரம் செய்வதை அரசு தடை செய்ய வேண்டும்...

தனியார் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் கல்விக்கு விளம்பரம் செய்வதை அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பிஷப் கவுன்சில், தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை: தமிழ்நாடு பிஷப் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையில் தமிழ்நாடு மாநிலக் கல்வி கொள்கை உருவாக்கும் குழுவின் தலைவர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி முருகேசனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைகளான சமயச்சார்பின்மை, சனநாயகம், சமத்துவம், நீதி, சுதந்திரம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம், பன்முகத்தன்மை இவற்றின் அடிப்படைகளைக் கொண்டே தமிழ்நாடு கல்விக்கொள்கை அமைய வேண்டும். இனவாதம், மதவாதம், தேசியவாதம் இவை போன்ற குறுகிய தளங்களில் கல்வி வேர் கொள்ள இயலாது.

வணிகமாயமாகும் கல்வி: நாடெங்கும் கல்வி விரைந்தும், பரந்தும் தனியார்மயமாகி வருவதால், அது முற்றிலும் வணிகமயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பொதுக் கல்வி முறை என்ற கட்டணமில்லாக் கல்வி அமைப்பை மீட்டெடுக்கவும், வலுப்படுத்தவும் வேண்டியது அரசின் கடமையாகும். இலவச மற்றும் பொதுக் கல்வி அமைப்பை வலிமைப்படுத்தாமல், எந்தக் கல்வியும் தமிழ்நாட்டில் செழுமை பெற இயலாது.

தற்பொழுது வசதிப்படைத்தோருக்கு ஐந்து நட்சத்திரக் கல்வி நிறுவனங்களும், வறுமைப்பட்டவர்களுக்கு குறைந்தப்பட்ச வசதிகளும் இல்லாத கல்வி நிறுவனங்களும் உள்ளன. பாடத்திட்டங்களும் மாறுபடுகின்றன. எனவே மாணவர்களுக்கு சமவாய்ப்பு இல்லாத சூழலில் உயர்கல்வி பெறுவதற்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுவது விசித்திரமாக இருக்கிறது. அதே நேரத்தில், பள்ளிக்கல்வியில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே உயர்கல்வியில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். உயர்கல்வியில் சேர்வதற்கு எத்தகைய நுழைவுத் தேர்வும் தவிர்க்கப்பட வேண்டும்.

தனியார் பயிற்சி மையங்கள் தடை செய்ய வேண்டும்: வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகள் தவிர, அனைத்து நிலைகளிலும் தனியார் பயிற்சி நிலையங்கள் தடைசெய்யப்பட வேண்டும். அதுவே முறையான கல்வி அமைப்பை நெறிப்படுத்த உதவும். ஏழைகளுக்கு எட்டாத இப்பயிற்சி மையங்களைத் தடை செய்யாமல் கல்வி வணிகமயமாதலைத் தடுக்க இயலாது.

தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் விளம்பரத்திற்குக் குறைவில்லை. அது வணிகமயமாதலின் குறியீடு. தனியார் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் கல்விக்கு விளம்பரம் செய்வதை அரசு தடை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் 4 வயது முதல் 18 வயது வரை இலவச கல்வி: குழந்தைகளின் முன்பருவக் கல்வி, தொடக்கக் கல்வியின் ஒரு பகுதியாகவே அமைய வேண்டும். அக்கல்வி 4 வயதில் தொடங்குவது பொருத்தமாக அமையும், குழந்தையின் 4 வயது முதல் 18 வயது வரையிலான இலவச மற்றும் கட்டாயக்கல்விக்கு அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இரு மொழிக் கல்விக் கொள்கை பின்பற்றப்பட்டு, பள்ளிக்கல்வியின் பயிற்றுமாெழியாகத் தாய்த் தமிழே அமைய வேண்டும். ஆங்கிலம் ஒரு மாெழிப்பாடமாக 6 ஆம் வகுப்பு முதல் கற்பிக்கப்படலாம்.

அறிவை மட்டும் அல்லாது ஒழுக்கத்தையும், கூட்டு வாழ்வையும், சமூகக் கடமைகளையும் பயிற்றுவிக்கும் கல்வி முறை அமைய வேண்டும். பள்ளி வளாகம் என்ற பெயரில் சிறு, சிறு பள்ளிகளின் அடையாளத்தை அழித்து விடாமல், அண்டைப் பள்ளிகள், பொதுப்பள்ளிகள் என்ற நடைமுறைக்கு கல்விக்கொள்கை வழிகாேல வேண்டும்.

மூன்றாம் வகுப்பிற்கு பிறகே பாடநூல்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். அதுவரை பாடல்கள், கதைகள் உள்ளிட்ட குதூகலக் கல்வி முறையால் தமிழர்தம் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும், கூட்டு வாழ்வும் போதிக்கப்பட வேண்டும்.

ஒப்பந்த நியமனம் கூடாது: அனைத்துப் பள்ளிகளிலும் முறையான மற்றும் நிரந்தரமான ஆசிரியர்கள், பணியாளர்களை நியமனம் செய்தல் வேண்டும். ஆசிரியர் பணிக்கு காலவரம்பு நியமனம், ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். ஆசிரியர் பணியை மரியாதைக்குரிய பணியாக மாற்ற வேண்டும்.

பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தாமல், பள்ளித்தேர்வு மட்டும் நடத்தி,மேனிலைக்கல்விக்கு (11,12 ம் வகுப்பிற்கு) மட்டும் பொதுத் தேர்வு நடத்தினால், இடைநிற்றலின்றி அதிக மாணவர்கள் மேனிலைக் கல்வியை முடிக்க வாய்ப்புண்டு.

மாணவர்களுக்கு உயர்கல்வி: உயர்கல்வியைத் தரப்படுத்தும் நோக்கில் பரந்துப்பட்ட சில நெறிமுறைகளை மட்டுமே மத்திய அரசு வழங்கலாம் என்பதே அரசியல் சட்டமாகும். அதனைத் தவிர்த்து நிறுவுதல், நிர்வாகம் செய்தல், பாடத்திட்டம் இறுதி செய்தல், மதிப்பீடு செய்தல் ஆகிய அனைத்தையும் மாநில அரசே மேற்கொள்ள வேண்டும்.

மத்தியில் அதிகாரக் குவிப்பின் அனைத்து வழிகளையும் அடைத்து, மாநிலக் கூட்டாசித் தத்துவத்தைக் கல்வியில் உறுதி செய்ய வேண்டும். அந்நிய நாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கடை விரிப்பதைத் தவிர்க்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் தேவையின் அடிப்படையில் மட்டும் கல்வி பரிவர்த்தனைத் திட்டங்களை மேற்கொள்ளலாம்.

உயர்கல்வியில் பட்டப்படிப்பிற்கு தற்பொழுது உள்ள 3+2 என்ற முறையே தொடரலாம். அதனை 4 ஆண்டுகளாக மாற்றுவதற்கு ஏற்புடைய காரணங்கள் ஏதுமில்லை. மருத்துவக்கல்வி உள்ளிட்ட தமிழ்நாட்டில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை மாநிலத்தின் கட்டுப்பாட்டில் அமைய வேண்டும். அதில் மத்திய அரசின் தலையீடு இருக்கக்கூடாது. செவிலியர் பயிற்சியில் பொதுப் பட்டயப்படிப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும். அதனால் மருத்துவச் சேவைக்கட்டமைப்பை வலுப்படுத்தும் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விஜயதசமியையொட்டி நாகர்கோவிலில் நடந்த ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.