உளுந்து, பச்சைப்பயிறு விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல்

author img

By

Published : Oct 12, 2021, 6:43 PM IST

farmer

சென்னை: உளுந்து, பச்சைப்பயிறு விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வரலாற்றின் முதன்முறையாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-2022ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அதில், புரதச்சத்து மிகுந்த பயிறுவகைகளின் சாகுபடி, உற்பத்தியை உயர்த்தும் வகையில், 'பலன் தரும் பயிறு உற்பத்தித் திட்டம்' அறிவிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, அறுவடைக் காலங்களில் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து, நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில், கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில், நடப்பாண்டில் துவரை, உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயிறு வகைகளை 61,000 மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது, காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பாசிப்பயிறை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

"விலை ஆதரவுத் திட்டம் (Price Support Scheme)" மூலம் பயிறு வகைகளை குறைந்தபட்ச ஆதார விலையில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு வசதியாக, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மாநில இணைப்பு முகமையாகவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் (Regulated Markets) பிரதான கொள்முதல் நிலையங்களாகவும் நாஃபெட் நிறுவனம் மத்திய கொள்முதல் முகமையாகவும் செயல்படும்.

நடப்பு 2021-22ஆம் ஆண்டு பருவத்தில் 4,000 மெட்ரிக் டன் உளுந்தும், 3,367 மெட்ரிக் டன் பச்சைப்பயிறும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது.

உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.63-க்கும் பச்சைப்பயிறு கிலோ ஒன்றுக்கு ரூ.72.75-க்கும் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும்.

துவரையைப் பொருத்தவரை, தற்போது வளர்ச்சிப் பருவத்தில் உள்ளதால், அறுவடை முடிந்தவுடன், கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொள்முதல் செய்யப்படும் பயிறுகளுக்கான வரையறை

கொள்முதலுக்காக கொண்டுவரப்படும் உளுந்து, பச்சைப்பயிரின் ஈரப்பதம் 12 விழுக்காட்டில் இருக்குமாறு நன்கு உலர வைத்து, சுத்தம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருத்தல் வேண்டும்.

உளுந்து கொள்முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 31 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும்,

பாசிப்பயிறு கொள்முதல் சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் 01.10.2021 தொடங்கி 90 நாட்கள் மேற்கொள்ளப்படும்.

பதிவு செய்வது எவ்வாறு?

இத்திட்டத்தின்மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார அட்டை மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களுடன் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி, பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உளுந்து, பாசிப்பயிறுக்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என விவசாயிகள் நலன் சார்ந்து அறிவிக்கப்பட்டது.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, பயிறு சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கக் குழு - உணவு வழங்கல் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.