அமைச்சர் நாசரின் செயல் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்: CM-க்கு ஓபிஎஸ் கண்டனம்!

author img

By

Published : Jan 25, 2023, 6:04 PM IST

ஓபிஎஸ்

கட்சி நிர்வாகி மீது தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கல்வீசிய சம்பவம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே, அதே சட்டம் ஒழுங்கை சீரழிப்பது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. இந்தச் செயலை செய்துள்ள பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு அதிமுக சார்பில் முதலில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசு ஊழியர்கள் செய்ய வேண்டிய பணிகளை தி.மு.க.வினரே மேற்கொள்வது, வாக்களித்த மக்களை அமைச்சர்களே கொச்சைப்படுத்துவது, மனுக்கள் கொடுக்க வரும் மக்களை அமைச்சர் அடிப்பது, கவுன்சிலரை அமைச்சர் அடிப்பது, அரசு அதிகாரிகளை மிரட்டுவது என்ற வரிசையில், தற்போது ஓர் அமைச்சரே ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது என்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக் கூட்ட பணிகளை பார்வையிட சென்ற பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அங்கு நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து, தான் அமைச்சர் என்பதையும் மறந்து, ஒரு ரவுடி போல கல் வீச்சில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி இன்று பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளியாகி, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது பணிகளை மேற்கொள்வேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஓர் அமைச்சர், அதனை முற்றிலும் அவமதிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதற்குச் சமம்.

தி.மு.க.வினர் மற்றும் அமைச்சர் பெருமக்களின் செயல்பாடுகளால் தூக்கமே போய்விட்டது என்று வருத்தப்பட்டு முதலமைச்சர் கூறிய நிலையில், ஓர் அமைச்சர் ரவுடி போல செயல்படுகிறார் என்றால் முதலமைச்சரின் வார்த்தையை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை என்றே மக்கள் கருதுகிறார்கள்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஓர் அமைச்சர், சட்டம் ஒழுங்கை சீரழிக்கிறார் என்பது ஒரு வெட்கக்கேடான செயல். இதுபோன்ற நடவடிக்கை தான் சட்டம் ஒழுங்கு சீராக செயல்பட வழி வகுக்கும். குற்றங்களை ஆராய்ந்து எந்தவிதப் பாகுபாடுமின்றி நடுநிலையுடன் செயல்படுவதே நல்ல ஆட்சி முறை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 2022-ல் ஃபாஸ்ட் டேக் மூலம் சுங்க கட்டண வசூல் ரூ.50,855 கோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.