சென்னையில் புதிதாக பூங்கா, விளையாட்டுத் திடல் அமைக்க மாநகராட்சித் திட்டம்!

author img

By

Published : Oct 5, 2022, 7:08 PM IST

சென்னையில் புதிதாக பூங்கா, விளையாட்டு திடல் அமைக்க மாநகராட்சி திட்டம்...

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிதாக 42 பூங்காக்களும், 11 விளையாட்டுத் திடலும் அமைக்க மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 738 பூங்காக்கள், 220 விளையாட்டுத் திடல்கள், 173 உடற்பயிற்சிக் கூடங்கள், 204 குழந்தைகள் விளையாட்டுத் திடல்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்தவும், புதிய விளையாட்டுத்திடல்கள் அமைக்கவும் மற்றும் விளையாட்டுத் திடல்களை மேம்படுத்தவும் சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தில் அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.16.19 கோடி மதிப்பில் 42 பூங்காக்கள் மற்றும் ரூ.4.50 கோடி மதிப்பில் 11 விளையாட்டுத்திடல்கள் அமைக்க ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

புதியதாக அமைக்கப்படவுள்ள பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை, குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், சுற்றுச்சுவர், சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், புல் தரைகள், பாரம்பரிய மர வகைகள், பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள் உட்பட பல்வேறு திட்டப்பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதையும் படிங்க: இந்த தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.