தண்டனைக்கைதிகள் முன்கூட்டியே விடுதலை கோர சட்டத்தில் உரிமையில்லை - உயர் நீதிமன்றம்

author img

By

Published : May 12, 2022, 9:48 PM IST

கைதிகள் முன்கூட்டியே விடுதலை கோர சட்ட உரிமையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை கோர சட்ட உரிமையோ அல்லது அடிப்படை உரிமையோ இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

சென்னை: கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தனது மகன் ஹரிஹரனை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி, அவரது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ’முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தண்டனைக் கைதிகள் 1,650 பேரை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் தனது மகனை விடுவிக்க அரசு மறுத்துவிட்டதாக’ கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஏ.ஏ. நக்கீரன் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இரண்டு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாலும், சிறையிலும் நன்னடத்தை விதிகளை ஹரிஹரன் கடைபிடிக்காததாலும் அவரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என வாதிட்டார்.

இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், தண்டனைக் கைதிகள், முன்கூட்டியே விடுதலை கோர சட்ட ரீதியாகவோ அல்லது அடிப்படை ரீதியாகவோ உரிமையில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த கருத்து, மற்ற வழக்குகளில் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பப்ஜி மதனின் ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.