'முதலமைச்சர் அறிவிப்புகள் யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றது' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

author img

By

Published : May 7, 2022, 4:28 PM IST

எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள் யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: திமுக ஆட்சி அமைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே 7) அறிவித்தார். இதைத்தொடர்ந்து தலைமை செயலக வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொண்ட பணிகளுக்குதான் முதலமைச்சர் திறப்பு விழா நடத்துகிறார். இந்த ஓராண்டு ஆட்சியில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

விவாசயிகளுக்கு மும்முனை மின்சாரம்: அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அதற்கு ஒரு திட்டத்தை தீட்டி பிரதமரிடம் வழங்கியதன் அடிப்படையில் 'நடந்தாய் வாழி' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிகளவில் இழப்பீடு பெற்று தந்தது அதிமுகதான். 6 மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம், அதிலும் விவாசயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கம் என்னும் அற்புதமான திட்டத்தை ஏழை எளிய குடும்பத்தினை சேர்ந்த பெண்களுக்கு வழங்கினோம்.

கரோனா காலத்திலும் அதிக தொழில் முதலீட்டை ஈர்த்தது அதிமுக. நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவை பொது தேர்தலின் போது அறிவித்தார்கள். முதல் கையெழுத்து நீட் ரத்து என்பது பச்சை பொய். நீட் தேர்வு கொண்டு வந்ததும் திமுக தான். ரத்து செய்வதாக நாடகம் போடுவதும் அவர்களே தான். ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் மினி கிளினிக் கொண்டு வந்தது அதிமுக அரசு.

ஏழைகளுக்கு மருத்துவம் அளிப்பது கூட இன்றைக்கு இவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்தது அதிமுக. சென்னை மாநகரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி பொறுத்தியுள்ளோம்" என்றார்.

திமுக ஓராண்டில் செய்தது சாதனை அல்ல வேதனை: அதைத்தொடர்ந்து பேசிய அவர், "அதிக அளவிலான சாலைகளை விரிவாக்கம் செய்து, தரமான சாலைகளை அமைத்து கொடுத்துள்ளோம். அதிக அளவிலான தார்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி கட்டினோம். ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் மருத்துவ கனவை 7.5% இட ஒதுக்கீடு மூலம் நிறைவேற்றினோம்.

பல்வேறு பெரியதிட்டங்களை நிறைவேற்றி சாதனைக்கு மேல் சாதனை படைத்தது அதிமுக அரசு. திமுக அரசால் மக்கள் வேதனைக்கு மேல் வேதனை படுகின்றனர். திமுக ஓராண்டில் செய்தது சாதனை அல்ல வேதனை. நாட்டிலேயே எங்கும் தயாரிக்க முடியாத வகையில் ஒழுகும் வெல்லத்தை மக்களுக்கு பொங்கல் தொகுப்பில் கொடுத்தனர். விஞ்ஞான முறைப்படி பொங்கல் தொகுப்பு கொடுத்த அரசு திமுக அரசு. வரலாற்றிலேயே யாரும் கொடுக்க முடியாத பொங்கல் பரிசு.

இப்படியே நான்கு ஆண்டுகள் கடத்துவார்கள்: பெண்களுக்கு இலவச பயணத்தில் அறிவிப்பு ஒன்று, செய்வது ஒன்று. தேர்தல் நேரத்தில் ஒரு அறிவிப்பு, தேர்தல் முடிந்த பின் ஒரு அறிவிப்பு. மாதந்தோறும் கேஸ் மானியம் 100 ரூபாய் இதுவரை வழங்கவில்லை. ஓரிரு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு 60% நிறைவேற்றியதாக கூறி வருகிறார்கள். 10 ஆண்டுகளாக தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு. இன்று மீண்டும் மின்வெட்டு நிலவி வருகிறது" என்று பேசினார்.

இன்று 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றது. அதிமுகவைத் தான் பின்பற்றுகிறார்கள், அவர்கள் சொந்தமாக எதுவும் அறிவிக்கவில்லை.

100க்கு 30% பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக இருக்கும் சூழலில், மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்தி தான் பெண்கள் பயணிக்கின்றனர். குடும்ப தலைவிகளுக்கான 1,000 ரூபாய் அடுத்த நான்கு ஆண்டுகளிலும் வழங்க மாட்டர்கள். அடுத்த ஆண்டு அடுத்த ஆண்டு என சொல்லி கொண்டே நான்கு ஆண்டை கடத்தி விடுவார்கள்" என்றார். அதிமுகவினர் இன்றைய பேரவை நிகழ்வுகளில் முழுவதும் பங்கேற்காமல் புறக்கணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு விடியல் வந்ததா ? நீட் முதல் திராவிட மாடல் வரை என்ன செய்தார் ஸ்டாலின்...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.