வணங்குவோம் சூரியனை! வாழ்த்துவோம் உழவரை ! - ஸ்டாலினின் பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்...

author img

By

Published : Jan 14, 2022, 9:49 AM IST

ஸ்டாலினின் பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்! திமுக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், "தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்!திமுக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுற செய்யும் ஊக்கத்தை பெறுகிறேன்.

உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன். இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனி பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்!" என்று தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன் - ஸ்டாலின்

முன்னதாக ஜனவரி 12 ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், "நம் உயிருடன் கலந்திருக்கும் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பொங்கல் வாழ்த்து மடல். உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உவகையும்; இல்லத்தில் மகிழ்ச்சியும் பொங்கி; தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளைய, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாள், உலகத்தாரின் அச்சாணியான உழவர்களின் தன்மான திருநாள், அவர்களின் அயராத உழைப்பிற்கு அரிய துணையாகும் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள், மரபார்ந்த மனங்கவர் கலைகளையும் வீர விளையாட்டுகளையும் வெளிப்படுத்தும் திருநாள்.

ஸ்டாலினின் பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்
ஸ்டாலினின் பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்

இப்படித் தனித்தனியாக வகைப்படுத்திச் சொல்லாமல் அனைத்தையும் இணைத்து ஒட்டுமொத்தமாக, ‘தமிழர் திருநாள்’ என, பூமிப் பந்தில் தமிழர்கள் எந்நாட்டில் இருந்தாலும் அங்கெல்லாம் போற்றப்படும் பொங்கல் நன்னாளில் இனிய வாழ்த்துகளை உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் தெரிவித்து உள்ளத்தில் உவகை கொள்கின்றேன்.

ஸ்டாலினின் பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்
ஸ்டாலினின் பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்

தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளைய - ஸ்டாலின்

பொங்கல் திருநாள் என்றாலே இனிப்பு-இனிமை. அதிலும் இந்த ஆண்டு, நம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு வருகின்ற முதல் பொங்கல் திருநாள் என்பதால் இரட்டிப்பு இனிப்பும் இனிமையும் இதயத்தை நிரப்புகிறது.

ஸ்டாலின் பொங்கல் கொண்டாட்டம்
ஸ்டாலின் பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தியதில் திராவிட இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு. பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் பொங்கல் திருநாளே தமிழர்கள் அனைவருக்குமான விழா என்பதை எழுத்துகளாலும் பேச்சுகளாலும் நிகழ்ச்சிகளாலும் மக்கள் மனத்தில் என்றும் நீங்காமல் நிலைபெறச் செய்தனர். பாவேந்தர் பாரதிதாசனும், தமிழறிஞர்களும் பொங்கல் விழாவையும், தை முதல் நாளையும் சிறப்பித்துப் பாடினர்.

ஸ்டாலின் பொங்கல் கொண்டாட்டம்
ஸ்டாலின் பொங்கல் கொண்டாட்டம்

உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கிட வேண்டும்

நிலமகள் நெற்சலங்கை கட்டி ‘தை... தை... தை...‘ எனக் குலுங்கி ஆடுகிற தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா நாளில் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சிப் பொங்கிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் திராவிட முன்னேற்றக் கழக அரசு, முழுக் கரும்புடன் பொங்கல் பரிசுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினைப் பல லட்சக்கணக்கான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கியிருக்கிறது.

ஸ்டாலின் பொங்கல் கொண்டாட்டம்
ஸ்டாலின் பொங்கல் கொண்டாட்டம்

ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பொங்கல் பரிசுப் பையையும் எடுத்துச் செல்லும் பொதுமக்கள் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி. அது அவர்களின் இதயத்திலிருந்து பொங்கி வழிந்தோடும் மகிழ்ச்சியல்லவா! வீண் - காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை விறகாக்கி அடுப்பெரித்து, இன்பப் பொங்கல் பொங்குவது போல, தமிழ்நாட்டு மக்களிடம் மகிழ்ச்சி பொங்கிடக் கண்டேன்.

பொதுமக்கள் நமக்களித்த இந்த மகத்தான வெற்றியை, தேர்தல் நேரத்துக் களப்பணியின் வாயிலாக உறுதிசெய்தவர்கள் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள்தானே! வெற்றி வீரர்களான உங்கள் முகத்திலும், அகத்திலும் தமிழர் திருநாளில் புன்சிரிப்பு பொங்கிட வேண்டுமன்றோ!

எனது கொளத்தூர் தொகுதியில் வெற்றிக்குப் பாடுபட்ட நிர்வாகிகளுக்குக் கழகத்தின் சார்பில் பொங்கல் பரிசுகளை என் கைகளால் வழங்கி மகிழ்ந்தேன்.மக்கள் நலனை மனத்தில் முழுமையாகக் கொண்டு, கட்டுப்பாடு காத்து, கடமை உணர்வுடன், கண்ணியம் மிளிர்ந்திடச் செயல்படும் உடன்பிறப்புகளின் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்து பொங்கும் மகிழ்ச்சியில் நானும் திளைப்பேன்.

தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்! தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளையட்டும்! அனைவருக்கும் தை முதல் நாளாம், இனிய பொங்கல் - இன்பத் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. மாட பிடி.. பரிச வாங்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.