'தமிழ் பரப்புரைக் கழகம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

author img

By

Published : Sep 25, 2022, 7:13 AM IST

'தமிழ் பரப்புரைக் கழகம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

‘தமிழ் பரப்புரைக் கழகம்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, தமிழ் மொழி குறித்து பேருரை ஆற்றினார்.

சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் "தமிழ் பரப்புரைக் கழகம்" திட்டத்தின் தொடக்க விழா நேற்று (செப் 24) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடப் புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளை முதலமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து விழாவில் பேருரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “உளங்கவர் ஓவியமே, உற்சாகக் காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ் புதுநிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனியத் தென்றலே, பனியே, கனியே, பழரசச் சுவையே, மரகத மணியே, மாணிக்கச் சுடரே, மன்பதை விளக்கே என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழை தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இருக்காது.

அத்தகைய தமிழ் வாழும் காலமெல்லாம் நின்று நிலைபெறக் கூடிய தமிழ் பரப்புரைக் கழகத்தைத் தொடங்கி வைப்பதை என்னுடைய வாழ்நாளில் கடமையாக மட்டுமல்ல, என்னுடைய வாழ்நாளில் பெருமையாகவும் நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.

திமுக பாடல்: 'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதை முழக்கமாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு, தமிழ் பாதுகாப்புக் கழகம் தொடங்குவது என்பது முழுமுதல் கடமை. திமுக என்று சொல்வதைத் திரையுலகத்தில் பரப்பியபோது, ஒரு பாடல் பிரபலப்படுத்தப்பட்டது.

அந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பாடி நடித்தவர் கலைவாணர். திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த நான்கே ஆண்டில் வந்தது, அந்தப் படம். தொண்டர்களுடைய உணர்ச்சியைத் தட்டி எழுப்பியது மட்டுமல்ல, திமுக என்றால் என்ன என்பதை சொன்னது அந்தப் பாடல்.

"தீனா... மூனா... கானா... எங்கள் திருக்குறள் முன்னேற்றக் கழகம் தீனா ... மூனா.... கானா அறிவினைப் பெருக்கிடும்! பகுத்தறிவோடு நாட்டினர் வாழ திருக்குறள் தந்தார் பெரியார். வள்ளுவப் பெரியார். அந்தப்பாதையிலே நாடு சென்றிடவே வழி வகுப்பதையும் அதன்படி, தீனா... மூனா...கானா... திருக்குறள் முன்னேற்றக் கழகம்..." என்று கலைவாணர் பாடுவார்.

அதாவது திமுக என்றாலே தமிழ். தமிழ் என்றாலே திமுக என்று வளர்க்கப்பட்டதுதான் இந்த இயக்கம். அத்தகைய இயக்கம் ஆட்சிக்கு வந்தபோது, தாய்த்தமிழ் நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன்னால், இந்த மாநிலத்துக்கு சென்னை ராஜதானி, சென்னை மாகாணம் என்று பெயர். அதனை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அண்ணா.

அத்தகைய அண்ணாவின் பெயரால் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்குவது மிக மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாகக் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்.

இணைய சேவையில் தமிழ் மொழியின் வளர்ச்சி: அந்த வகையில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் எண்மச் சேவைகள் துறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பவியலுக்கு அடித்தளம் அமைத்ததே திமுக அரசு தான். இதற்கு கம்பீரமான சாட்சியாக இன்றும் எழிலுடன் நிற்கிறது டைடல் பார்க்.

உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால், அதற்கு கருணாநிதி தான் அடித்தளம் அமைத்தார். அதன் அடுத்த கட்டம்தான் கணினிமயமாக்கல். நம்முடைய அறிவுச் சொத்துக்கள் அனைத்தையும் முழுமையாக அறிவியல் தொழில் நுட்பங்களின் அடிப்படையில் மாற்றிச் சேமித்து வைக்கக்கூடிய, மகத்தான பணியைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் செய்து வருகிறது.

1999 ஆம் ஆண்டு Tamilnet99 என்ற தமிழ் இணையவழி மாநாட்டின் மூலம் இணையத்தமிழ் தொடர்பான முன்னெடுப்புகளையும், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தோற்றத்தையும் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன் பின் 5.7.2000 அன்று தமிழ் இணையக் கல்விக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

பல நூறு ஆண்டுகளாகத் தமிழின் சொத்துக்கள் சேகரித்து வைக்கப்படாமல் அழிந்து போய்விட்டது. அந்தத் தவறு தடுக்கப்பட்டு, இன்று தொகுத்தும், சேகரித்தும் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் மாற்றியும் வைத்திருக்கிறோம். இதற்கு மகுடம் வைப்பதைப் போல தமிழ் பரப்புரைக் கழகம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமாகவும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கிறார்கள். சில நாடுகளில் தமிழ் எழுதவும், பேசவும், படிக்கவும் மறந்த தமிழர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழைச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

24 மொழிகளில் தமிழ் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 நாடுகள், 20 மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் இணைய வழியாக இணைந்து இந்த விழாவில் பங்கேற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

உணர்வால், உள்ளத்தால், தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அமெரிக்கா, குவைத், ஓமன், நார்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த நம் உறவுகளும் இணைந்துள்ளார்கள். மொழிக்கு மட்டும் தான் இத்தகைய அன்பால் இணைக்கக்கூடிய ஆற்றல் உண்டு. மொழியால் இணைந்தவர்களை சாதியால், மதத்தால் பிரிக்க முடியாது.

தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பேராசிரியர் செந்தமிழ் அரிமா என்று போற்றப்பட்ட இலக்குவனார், தமிழ் காப்புக் கழகம் தொடங்கினார். அது தமிழைக் காக்க வேண்டிய காலக்கட்டமாக இருந்தது.

பிரத்யேக எழுத்துருக்கள்: தமிழை நாம் பாதுகாத்துவிட்டோம். இது தமிழை பரப்ப வேண்டிய காலக்கட்டம். அதனால் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கி இருக்கிறோம். தாய்மொழியாம் தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்லும் உயரிய நோக்கம்தான் இதற்குக் காரணம். தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் அயலக வாழ் தமிழ் மாணவர்களுக்கு அடிப்படை நிலை முதல் பட்டக்கல்வி நிலை வரை தமிழ்க்கல்வி இணைய வழியாக அளிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தொடர்பு மையங்கள் மூலம் இந்த இணையவழி தமிழ்க் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 28 தொடர்பு மையங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த ஒராண்டில் மட்டும் 17 புதிய தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் புத்தகங்கள் மின்னுருவாக்கம் செய்யப்படுகின்றன. கணினித் தமிழுக்குத் தேவைப்படும் மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. அண்மையில் கீழடி என்ற விசைப்பலகையும், தமிழிணைய ஒருங்குறி மாற்றியும் நமது அரசால் வெளியிடப்பட்டன.

தமிழ் எழுத்துருக்களைத் தரப்படுத்தி, அவற்றை உலகம் முழுமைக்கும் பொதுமைப்படுத்தி இருப்பது தமிழ் இணையக் கல்விக் கழகத்தினுடைய முக்கிய சாதனை. இந்த முன்னேற்றங்களில் மாணவர்களின் பங்கேற்பை உறுதி செய்ய கணித்தமிழ் பேரவைகள் 200 கல்லூரிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு நமது அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவீர்கள். தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றது முதல் பொருநை அருங்காட்சியகம் அமைப்பது வரை நாங்கள் தமிழுக்காகவும், தமிழர்களின் தொன்மையினை வெளிக்கொணருவதற்காகவும் முன்னெடுக்கும் முயற்சிகள் பல.

தமிழுக்கு திமுக என்ன செய்தது? 2022-2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூபாய் 82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் எழுத்தாளர்களைச் சிறப்பித்து வருகிறோம். ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நிதி உதவி அளித்திருக்கிறோம்.

தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கிறோம். நவிமும்பை தமிழ்ச் சங்கக் கட்டடத்திற்கு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. ‘தீராக்காதல் திருக்குறள்’ என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. பாரதியின் நினைவு நூற்றாண்டு தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

திருவள்ளுவர் தொடங்கி அறிஞர்கள் பெயரால் விருதுகள் வழங்கி வருகிறோம். புகழ்பெற்ற தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரின் அரிய ஒலி அல்லது ஒளிப் பொழிவுகளை இணையதளத்தில் ஆவணப்படுத்தி வருகிறோம். இலக்கிய கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.

சில நாட்களுக்கு முன்னால் தமிழ்நாடு வந்த அகில இந்தியத் தலைவர் ஒருவர், "தமிழுக்கு திமுக என்ன செய்தது?" என்று கேட்டுவிட்டுப் போய்விட்டார். தமிழுக்கு என்ன செய்யவில்லை என்பதுதான் அவருக்கு நம்முடைய பதிலாக இருக்க முடியும். இப்படி ஓராண்டு காலத்தில் தமிழ்த்தொண்டு ஆற்றிய ஆட்சி திமுக ஆட்சி.

இதற்கு மகுடமாகத்தான் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழின் புகழ்பாடும் கழகம் அல்ல. பேசிக் களிக்கும் கழகம் அல்ல. தமிழை உலகெங்கும் பரப்பக்கூடிய கழகம். தமிழர்கள் அனைவரும் தமிழில் எழுத, பேச, படிக்க, சிந்திக்க வேண்டும் என்பதே இதனுடைய முழுமுதல் நோக்கம்.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு வாழ்க்கை ஆகியவற்றின் காரணமாக, தமிழை முழுமையாகப் பயன்படுத்த முடியாத சூழலுக்கு அயலகத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இது தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடி. அப்படி ஒரு நெருக்கடி இருந்தாலும், தமிழைத் தள்ளிவைத்து விடக்கூடாது.

LSRW முறை: மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம். மொழிதான் ஒரு இனத்தின் உயிர். மொழிதான் ஒரு மனிதரின் உணர்ச்சிக்கு உணவு. மொழிதான் ஒருவரின் சிந்தனைக்கு உரம். எனவே தாய்மொழிப் பற்று என்பது தாய்மொழிப் படிப்பாக, தாய்மொழி அறிவாக மாற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

இப்போது முதல்நிலை முதல் பருவப் பாடநூல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியை எளிமையாக கற்க மாணவர்களின் கற்கும் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. விருப்பங்களோடு தமிழைக் கற்கலாம். படங்களைக் கொண்டு தமிழைக் கற்கலாம். audio books வழங்க இருக்கிறோம்.

சந்தேகங்கள் எழும்போது video lessons பார்த்து தெளியலாம். flash cards மூலம் அதிக சொற்களைக் கற்கலாம். இதன் மூலம் தமிழ் கற்றல் என்பது ஒரு பாடமாக இல்லாமல் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இந்தப் புத்தகம்.

12 மொழிகளில் ஒலிப் புத்தகமாகவும் கிடைக்கிறது. L-S-R-W (listening, Speaking, Reading, Writing) என்ற திறன்கள் அடிப்படையில் இவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஐந்தாம் நிலை வரையிலான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன.

தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடப் புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளை முதலமைச்சர் வெளியிட்டார்
தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடப் புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளை முதலமைச்சர் வெளியிட்டார்

இதன் மூலமாக தமிழில் பேசலாம், படிக்கலாம் என்பது எளிமையாக்கப்படும். தமிழ் படிப்பது என்பதை சுவைக்காக மட்டுமல்லாமல், தமிழ் பண்பாட்டை அறிவதற்காகவும் அனைவரும் படிக்க வேண்டும். நம்முடைய இலக்கியங்கள் அறநெறியை அதிகமாக வலியுறுத்துகின்றன.

பிரிக்கும் பண்பாடு அல்ல நம்முடையது. பிணைக்கும் பண்பாடுதான் தமிழ் பண்பாடு. அத்தகைய பண்பாட்டைக் கொண்ட பழந்தமிழ் இலக்கியங்களை அனைவரும் அறிய தமிழைப் படிக்க வேண்டும். தேவாரம் உள்ளிட்ட பாடல்களை இசைக் கோவைகளாக வழங்க இருக்கிறோம்.

முதல்நிலை முதல் பருவத்திற்கான பாடநூல்கள் 26 நாடுகள், 20 மாநிலங்களில் உள்ள தமிழ் பள்ளிகள், தொடர்பு மையங்கள், தமிழ் ஆர்வலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது தொடங்கப்பட்டுள்ள தமிழ் பரப்புரைக் கழகத்தின் மூலமாக 22 நாடுகள் மற்றும் 20 மாநிலங்களைச் சேர்ந்த 25,000 மாணவர்கள் முதற்கட்டமாகப் பயனடைய இருக்கிறார்கள்.

இதனை மேலும் உலகு தழுவி வாழக்கூடிய பல ஆயிரக்கணக்கான அயலகத் தமிழ் மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் பணியை தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலமாகத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணாவின் கனவை, செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்த கருணாநிதியின் கனவை நிறைவேறும் நாளாக இது அமைந்துள்ளது.

தொண்டு செய்வாய் தமிழுக்கு; துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே” என பேசினார்.

தமிழ் பரப்புரைக் கழகம் திட்டம் குறித்த தொகுப்பை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ் பரப்புரைக் கழகம் திட்டம் குறித்த தொகுப்பை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

இதையும் படிங்க: திமுகவில் இணைகிறாரா நயினார் நாகேந்திரன்? ; நெல்லை அரசியலில் பரபரப்பு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.