தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Mar 17, 2023, 1:53 PM IST

Updated : Mar 17, 2023, 2:54 PM IST

Etv Bharath

அடுத்த நான்கு நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியிருக்கும் நிலையில் திடீர் மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக எழும்பூர், சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம், கொளத்தூர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மேலும் அண்ணாசாலை, ராயப்பேட்டை, மயிலாப்பூர் வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதலே மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(மார்ச்.17) முதல் மார்ச் 20ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 21ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று(மார்ச்.17) மற்றும் நாளை (மார்ச்.18) ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) பகுதிகளில் தலா 6 செ.மீ, மழையும், சிவகிரியில் (தென்காசி) 5 செ.மீ, வத்திராயிருப்பு (விருதுநகர்), சின்கோனா (கோயம்புத்தூர்), பெரியார் (தேனி), திற்பரப்பு (கன்னியாகுமரி) ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ அளவில் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: விழுப்புரம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி அடித்துக்கொலை!

Last Updated :Mar 17, 2023, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.