”ஜெய்ஹிந்த் ” என முழங்கிய செயல் வீரர் செண்பகராமன்

author img

By

Published : Aug 9, 2022, 9:17 PM IST

Updated : Aug 9, 2022, 10:15 PM IST

முதன்முதல் ”ஜெய்ஹிந்த் ” முழங்கிய செயல் வீரர் செண்பகராமன்

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட தமிழர்களில் இளம்வயதிலேயே சுதந்திர வேட்கையில் ஈர்க்கப்பட்டு, செயல் வீரராக செண்பகராமன் திகழ்ந்துள்ளார். அவரை பற்றிய ஒரு தொகுப்பை காணலாம்.

இந்தியாவில் "ஜெய் ஹிந்த்” முழக்கத்தை செண்பகராமன் சின்னஞ் சிறு பாலகனாக, பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே, சிருஷ்டித்து விட்டார் என்றால் உலகம் நிச்சயம் ஆச்சரியப்படத் தான் செய்யும். பன்னிரண்டு உலக மொழிகளில், மிகச் சரளமாக உரையாடும் ஆற்றல் மிக்க செண்பகராமன், அந்தக் கட்டத்திலே, ஒரு சர்வதேச கதாநாயகனாகத் திகழ்ந்தார்.

“எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும் என்று கூறியவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால் நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் , நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்” என்று செண்பகராமன் கூறியுள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை 1891ம் ஆண்டு செப்டம்பர் 15 பிறந்தவர் அவர், 1934 ம் ஆண்டு மே மாதம் 26 ந் தேதி வரையில் வாழ்ந்தார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி. இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார்.

செண்பகராமன் 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தார். தந்தை சின்னசாமிப்பிள்ளை, தாயார் நாகம்மாள். சின்னசாமிபிள்ளை திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாக இருந்தார். செண்பகராமன் இளம் வயதிலேயே விளையாட்டிலும், சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார். திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார்.

வீரபாண்டியகட்டபொம்மன் ஆரம்பித்த விடுதலைப்போர், இந்தியா முழுவதும் பரவிய காலம் அது. இந்திய உபகண்டமெங்கும் ஒரே கொந்தளிப்பு. அதை அடக்க பிரிட்டிஷ் ஆட்சியினர், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட போராட்டத்தில் குதித்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு, ஒரு குட்டித் தலைவன் வயது பதினைந்துதான். ஆனால் ஆற்றலோ, அணைகடந்ததாக அமைந்தது.

இந்தச் சிறுவன் நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் தலைவனாகி விட்டான். எழுச்சி மிக்க அவனது பேச்சுக்கள், இளைஞர்களின் இதயங்களில் ஆழப் பாய்ந்தன. அவர் ஆரம்பித்த தேசியப்படை, பலமிக்க ஒரு நிறுவனமாக உருவாகியது. சிறுவனது வாயையும், கரங்களையும் கட்டிப் போட முயன்றது. இதனால் சின்னஞ் சிறு வீரன் செண்பகராமனுக்கு சுதந்திரத் தாகம் எரிமலையாகியது.
திருவனந்தபுரத்திலே அடங்கிக் கிடந்த செண்பகராமனை, உலகம் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் இக்கட்டத்தில் தான் ஏற்பட்டது.

இந்த நிலையில், 1908-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் திகதி என்.எல்.ஜி.யோர்க் என்ற ஜெர்மனிய கப்பலில் ஏறி செண்பகராமன் ஐரோப்பிய நாட்டிற்கு சென்றார். செண்பகராமனின் வீட்டுக்கு பலத்த காவல், பள்ளிக்கூடத்திற் பயிலும் சின்னஞ் சிறு மாணவன் எங்கே எப்படி மறைந்திருக்க முடியும் என்ற கேள்வியைக் கேட்டுக் கேட்டு கிலிபிடித்துக் கலங்கினர் வெள்ளையர்கள்.

ஐரோப்பா நோக்கிச் சென்ற அவன் கால்கள் இத்தாலியில் சிறிது காலம் நிலைத்தன. அங்கு இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்று, பின் சுவிட்சர்லாந்திற்குச் சென்றார். அங்குள்ள கலாசாலை ஒன்றின் மிகச் சிறந்த மாணவனாக திகழ்ந்த செண்பகராமன் பட்டங்கள் பலவற்றைத் தன் பெயரோடு சேர்த்துக் கொண்டார்.

மாணவராக இருக்கும் போதே, சுவிட்சர்லாந்தில் நிகழ்த்திய பல சொற்பொழிவுகளின் போது, இந்திய நாட்டில் நடைபெறும் அந்நிய அடக்கு முறைகளைப் பற்றி வீரம் கொப்பளிக்கும் வகையில் எடுத்துக் கூறி, இந்தியாவின்பால், அந்நாட்டு மக்களின் அனுதாபத்தையும், ஆதரவையும் திருப்ப முயன்றார். சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்குச் சென்ற செண்பகராமன், அங்குள்ள பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்று, தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார்.

விடுதலைப் போரில் ஈடுபாடு

இவர் மன்னர் உயர் நிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் (1960 க்கு முந்தைய பள்ளி இறுதி வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது இந்தியாவில் விடுதலைக் கணல் எரியத்தொடங்கிய காலம். செண்பகராமனையும் விடுதலை தீ பற்றிக்கொண்டது. அச்சிறிய வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு "ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம்" ஏற்படுத்தி ”வந்தே மாதரம்” என உரிமை முழக்கமிட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தை எழுப்பினார்.

”ஜெய் ஹிந்த்” எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளையே ஆவார். 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் அவர் இம்முழக்கத்தை முழங்கினார். இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார்.

வெளிநாடுகளில் விடுதலை உணர்வு

பெர்லினில் இந்திய சர்வதேசக் குழுவை நிறுவினார். ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவைக் குறித்து ஆங்கிலேயர் செய்து வந்த பொய் பிரச்சாரத்தை இக்குழுவின் உதவியுடன் முறியடித்தார். 'புரோ இந்தியா' என்ற இதழைத் தொடங்கி இந்தியர்களின் நிலைகளையும், ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந்தியர்களைப் பற்றிய பொய்யான வதந்திகளையும் வெளிப்படுத்தினார். சீனா, தென்னாப்பிரிக்கா, மியான்மர் முதலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து உலக மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டி இந்தியாவிற்கு ஆதரவைத் திரட்டினார்.

வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து காபூலின் ராஜா மஹேந்திர பிரதாப்பை அதிபராகவும், மவுலானா பர்கத்தை பிரதம மந்திரியாகவும் கொண்டு இந்தியர்கள் தங்களே நடத்துகின்ற போட்டி அரசை 1915- ல் ஆப்கானித்தானில் நிறுவினர். இவ்வரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செம்பகராமன் பிள்ளை பணியாற்றினார்.

இத்தகைய புரட்சிகளுக்கு ஜெர்மனி சுயநல நோக்கத்துடன் ஆதரவளித்து வந்தது. ஆங்கிலேய அரசு கொடுத்த நெருக்கடியின் காரணமாக ஜப்பான் அரசு இவ்வரசுக்கு கொடுத்த ஆதரவை 1918 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றதால் இந்தியாவின் தற்காலிக புகலிட அரசு ஆப்கானித்தானிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இந்தியாவில், சுதந்திரப் போராட்டங்கள் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்து கொண்டிருந்தன. அங்கு பாஞ்சால். வங்காள வீரர்கள் நடத்திய தீரமான போராட்டங்களுக்கு சென்பகராமன் ஜெர்மனியிலிருந்து ரகசியமாக ஆயுதங்களை அனுப்பி உதவி செய்தார். வங்கத்தின் சிங்கத்தை டாக்டர் பிள்ளை சந்தித்த சம்பவம், இந்திய வரலாற்றில் இன்று மறைக்கப்பட்டோ மறக்கப்பட்டோ இருந்த போதிலும், ஓரு முக்கிய கட்டமென்றே கூறவேண்டும்.

1933-ம் வியன்னாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்கு டாக்டர் பிள்ளையும் சென்றிருந்தார். இந்தியப் பிரதிநிதியாக அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரசன்னமாகி இருந்தார். சென்பகராமனும், போஸூம் நீண்ட நேரம் உரையாடினார்கள். பாரதத்தின் விடுதலையைப் பெறுவது எப்படி என்பது பற்றி இருவரும் ஆராய்ந்தனர். அப்போது சென்பகராமன் தெரிவித்த ஒரு திட்டம் சந்திரபோஸைப் பெரிதும் கவர்ந்தது. தான் தேடிக்கொண்டிருந்த பாதையைக் காட்டியவர் என்ற மதிப்பில் சென்பகராமனை ஆரத்தழுவி பூரித்தார் போஸ்.

”இந்தியா விடுதலை பெற வேண்டுமானால், இந்தியாவுக்கு வெளியே இந்திய தேசிய ராணுவம் ஒன்றை அமைக்க வேண்டும். அந்நிய நாடுகளின் ஆதரவோடு தான். பிரிட்டிஷாரை வெளியேற்ற வேண்டும். உலக மகா யுத்தத்தின் போது தான் கண்ட அனுபவங்களைக் கொண்டே, இந்தத் திட்டத்தை நான் வகுத்தேன்” என்று கூறினார் செண்பகராமன்.

“டாக்டர் பிள்ளை, உங்கள் அற்புதமான திட்டத்தை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது அமுலாக்க நிச்சயம் நான் தவற மாட்டேன்” என்று சத்திய வாக்குக் கொடுத்தார் சுபாஸ் சந்திரபோஸ். இந்த சத்திய வாக்கின் அடிப்டையில் தான் பின்னர் மகாத்மா காந்தியடிகளை பின்பற்றிய காலத்திலும், போஸ் தீவிரமாக நடந்து கொண்டார். செண்பகராமனின் சக்தியே போஸை இயக்கியது, என்று கூறப்படுகிறது. மீண்டும் ஒரு மறை சென்பகராமனை சந்திரபோஸ். பெர்லினில் சந்தித்த போது. பிள்ளை வகுத்த திட்டமும், தான் அளித்த வாக்குறுதியும் நிறைவேறும் காலம் நெருங்கி வருவதாக போஸ் கூறினாராம்.

அந்த நினைப்பை நிதர்சனமாக்குவது போல, 1939 ல் உலக போர் வெடித்தது. அப்போது சுபாஷ் சிறையில் அடைபட்டுக் கிடந்தார். இக்கட்டத்தில் தான் சென்பகராமனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்று, திட்டவட்டமாக நம்பிய போஸ், சிறையிலிருந்து வெளியேற, உண்ணாவிரதத்தை ஆயுதமாக எடுத்தார். தக்க பலன் கிட்டியது ஆனால் வீட்டிலே பாதுகாப்புக் கைதியாக்கப்பட்டார். கடுமையான காவலையும் மீறி, ஒரு நாள் எப்படியோ இந்தியாவை விட்டு வெளியேறிய போஸ் செண்பகராமன் ஏற்கனவே அஸ்திவாரம் இட்டிருந்த இந்திய தேசிய ராணுவத்தின் (ஐ.என்.ஏ) தலைமையை ஏற்று, சென்பகராமனுக்கு அளித்த சத்தியத்தை நிறைவேற்றி விட்டார்.

போர் செயல்பாடுகள்

1914 -ல் உலகப்போர் மூண்ட போது இங்கிலாந்தை எதிர்த்து ஜெர்மனி போரிட்டது. இங்கிலாந்தின் கடற்படையைக் கலங்க வைக்க ஜெர்மானியர்கள் நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினர். 'எம்டன்' என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் செண்பகராமன் உதவிப் பொறியாளராகப் பணியாற்றினார்.

வங்காள விரிகுடாவிற்கு வந்த ஹிட்லரின் ஜெர்மனியக் கடற்படையின் நாசகாரிக் கப்பலான “எம்டன்”, ஆங்கில அரசுக்குச் சொந்தமான இரு பெரிய எண்ணெய்க் கிடங்குகளின் மீதும் சென்னைத் துறைமுகத்தின் மீதும், புனித ஜார்ஜ் கோட்டையிலும், திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் இக்கப்பல் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. இதனால் சென்னைக் கோட்டை உயர் நீதிமன்றத்தின் வெளிப்புறச் சுவரின் ஒருபகுதி அடியோடு பெயர்ந்து விழுந்தது. கோட்டையை நோக்கி வீசப்பட்ட குண்டு வெடிக்காமல் மண்ணில் புதைந்தது.

ஹிட்லரும் செண்பகராமனும்

முதல் உலகப்போருக்குப் பின் ஜெர்மனியில் நாட்சிக்கட்சி ஹிட்லர் தலைமையில் உருவாகி வளர்ந்தது. ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார். ஒரு சமயம் செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்த போது "இந்தியர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு அடிமையாக இருக்கவே தகுந்தவர்கள், இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே" என்று இந்தியரைத் தாழ்த்திக் கூறினார். ஹிட்லர் கூறியதைக் கேட்ட நாட்டுப் பற்று மிக்க செண்பக ராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தார்.

இறுதிக் காலம்

தங்கள் தலைவரை வாதாடி வென்ற செண்பகராமனை, நாசியர் வெறுத்தனர். எனவே, அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி நஞ்சைக் கலந்தனர். அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி படுத்த படுக்கையில் வீழ்த்தியது.

தீவிர சிகிச்சைக்குப் பின் சிறிது நாளில் நலம் பெற்ற செண்பகராமனை, நாசிகள் மீண்டும் தாக்கிப் படுகாயப் படுத்தினார்கள். அதுவே அவரை மரணப் படுக்கையில் வீழ்த்தக் காரணமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று செண்பக ராமனின் உயிர் பிரிந்தது.

செண்பகராமனின் இறுதி விருப்பம்

செண்பகராமன் உயிர் பிரியும் முன் " நான் இறந்த பிறகு என் சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சாம்பலின் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலைக் கரைத்த திருவனந்தபுரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்" என்று தம் விருப்பத்தை வெளியிட்டார்.

இவரின் துணைவியார் ஜான்சி தம் கணவரின் சாம்பலைப் பாதுகாத்து வைத்திருந்தார். முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சுதந்திர இந்தியாவில் 1966 ஆம் ஆண்டு செண்பகராமன் விரும்பியபடியே அவரின் சாம்பல் கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டு நாஞ்சில் வயல்களில் தூவப்பட்டது.

இதையும் படிங்க: தேசியக்கொடியை பயன்படுத்தும் முறை - வீடியோ வெளியிட்ட விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்!

Last Updated :Aug 9, 2022, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.