வெளிநாட்டு பங்களிப்பு சட்ட ஒழுங்கு முறை விவகாரம் - 14 பேரை கைது செய்தது சிபிஐ!

author img

By

Published : May 12, 2022, 7:52 PM IST

வெளிநாட்டு பங்களிப்பு சட்ட ஒழுங்கு முறை  விவகாரம் - 14 பேரை கைது செய்தது சிபிஐ!

வெளிநாட்டு பங்களிப்பு சட்ட ஒழுங்கு முறை விதிகளை பின்பற்றாத விவகாரத்தில் மத்திய அரசு ஊழியர்கள் ஆறு பேர் உள்பட 14 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

சென்னை : சிபிஐக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டப் பிரிவில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள், என்.ஜி.ஓக்கள், உள்துறை அமைச்சக அலுவலர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் சில அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு சாதகமாக முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

குறிப்பாக இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதற்கு மற்றும் புதுப்பித்தல் மற்றும் விதிகளை மீறி வெளிநாட்டிலிருந்து நிதிகளை பெறுவது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவ்வாறாக வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதியை போலி ஆவணங்கள் மூலம் தவறாக கணக்கு காட்டவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட பிரிவின் அதிகாரி பிரமோத்குமார் பஸின், பல என்ஜிஓ களிடம் லஞ்சம் பெற்று, அதற்கு அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு உடந்தையாக இருந்தது தகவல் கிடைத்தது. தன் பெயரில் மட்டும் அல்லாது பல உள்துறை அமைச்சக அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஹவாலா மூலம் லஞ்சமாக என்ஜிஓ களிடமிருந்து முறைகேட்டில் ஈடுபடுவதற்கு லஞ்சம் பெற்றதும் தெரியவந்தது.

இந்தத் தகவலை அடிப்படையாக வைத்து நேற்று நாடு முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்தச் சோதனை அடிப்படையில் மத்திய அரசு அலுவலர்கள் ஹவாலா தரகர்கள் என்ஜிஓ நிர்வாகிகள் என 33 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் 6 பேர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆவர்.

குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட்_ இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்களும் எலக்ட்ரானிக் ஆவணங்களும், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.3.21கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் கோயம்புத்தூரில் உள்ள கங்கா ஆர்தோபெடிக் ஆராய்ச்சி மற்றும் கல்வி பவுண்டேஷனுக்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவில் புதுப்பித்தலுக்கான அனுமதி வழங்குவதற்கு அந்த பவுண்டேஷனை சேர்ந்த ராஜசேகரன் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டண்கள் வாகிஸ், சுகுணா ரவிச்சந்திரன் ஆகியோர் மூலம் சுமார் 4 லட்ச ரூபாய் லஞ்சப் பணத்தை சென்னையைச் சேர்ந்த ஹவாலா தரகர் ராமானந்த் பரீக்கிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இந்தப் பணத்தை ஹவாலா முறையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டப்பிரிவு ஆணையத்தின் அதிகாரியான பிரமோத் குமார் பஸ்ஸின் என்பவருக்காக கொடுக்கப்பட்ட லஞ்சம் என்பதும் சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசு அதிகாரியான பிரமோத் குமார் சார்பில் பல இடைத்தரகர்கள் மூலம் லஞ்சப் பணம் கைமாறும் போது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் விசாரணையில் முக்கிய மத்திய அரசு அதிகாரியான பிரமோத் குமார் பஸின் பல இடைத்தரகர்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள என்.ஜி.ஓக்களை தொடர்புகொண்டு அங்கீகாரம் வழங்கவும் புதுப்பித்தலுக்கான அனுமதி வழங்கவும் லஞ்சம் கேட்டது தெரியவந்துள்ளது. அதற்கு சில என்.ஜி.ஓக்கள் லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அந்த அடிப்படையில் அணிஸ் செல்வராஜ் என்ற தரகர் மூலமாக மாமல்லபுரத்தில் உள்ள சர்ச் ஆப் க்ரிஷ்ட் சாரிட்டபிள் அறக்கட்டளையை சேர்ந்த E.K துரைராஜ் என்பவரிடம் லஞ்சம் கேட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் கடலூரில் உள்ள மல்டி பர்ப்பஸ் சோசியல் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த சின்னப்பன் பிச்சை பிள்ளை என்பவரிடம் புதுப்பித்தல் அனுமதிக்காக இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதும் தெரியவந்துள்ளது.

இதேபோல் நீலகிரியில் உள்ள மத்திய பழங்குடியின மற்றும் ஊரக வளர்ச்சி அறக்கட்டளையின் புதுப்பித்தல் அனுமதிக்காக ஐந்து லட்ச ரூபாய் பணத்தை லஞ்சமாக கேட்கப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சென்னை வேப்பேரியில் உள்ள இந்தியா எவ்ரி ஹோம் க்ரூஸ்டே என்ற அமைப்பிற்கு புதுப்பித்தல் அனுமதிக்காக அதன் சார்ட்டட் அக்கவுன்டன்ட் பொன் பாண்டி இன்பரசி என்பவரிடம் லஞ்சமாக பணம் கேட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதேபோல் நுங்கம்பாக்கத்தில் உள்ள ரவுண்ட் டேபிள் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்த இளங்கோ என்பவரிடமும் ஒரு லட்ச ரூபாய் புதுப்பித்தலுக்கான அனுமதிக்காக லஞ்சம் கேட்டதையும் சிபி ஐ கண்டுபிடித்துள்ளது.

இவ்வாறாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் 6 என்.ஜி.ஓக்களை புதுப்பித்தல் அனுமதிக்காக மிரட்டி லஞ்சம் கேட்டதும், அதில் சில என்ஜிஓ க்கள் முறைகேடாக லஞ்சம் கொடுத்து அனுமதி பெற முயற்சி செய்ததும் விசாரணையில் அம்பலமானது.

அந்த அடிப்படையில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டவிதிகளை மீறி முறைகேட்டில் இதுபோன்று ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் கோயம்புத்தூரில் உள்ள கங்கா ஆர்தோபெடிக் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தை சேர்ந்த ராஜசேகரன் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டண்ட்கள் வேப்பேரியை சேர்ந்த பொன்பாண்டி இன்பரசு மற்றும் வாகீஸ், சுகுணா ரவிச்சந்திரன் மற்றும் ஹவாலா தரகர்கள் என சென்னை ஆவடியை சேர்ந்த ராம்நாத் பரிக், அம்பத்தூரை சேர்ந்த அணிஸ் செல்வராஜ், வேலூரில் சமூக திட்டங்களுக்கான அரசு சாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சென்னையில் வசிக்கும் ராபின் தேவதாஸ், கடலூரில் உள்ள மல்டி பர்ப்பஸ் சோசியல் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த சின்னப்பன் பிச்சை பிள்ளை, நீலகிரியில் உள்ள மத்திய பழங்குடியினர் மற்றும் ஊரக வளர்ச்சி அறக்கட்டளை சேர்ந்த ராமசுவாமி ரங்கநாதன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 9 பேர்களில் சென்னையை சேர்ந்த ஹவாலா தரகர் ராமானந்த் பரிக், ராபின் தேவதாஸ் மற்றும் கோயம்புத்தூர் கங்கா ஆர்தோபெடிக் ஆராய்ச்சி மற்றும் கல்வி கண்டிஷனிங் சார்ட்டட் அக்கவுண்டண்ட் வாகீஸ் ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதே போன்று இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இடைத்தரகர்கள் மூலமாக பல என்.ஜி.ஓக்கள் இடம் மிரட்டி லஞ்சம் கேட்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட என்.ஜி.ஒ வை சேர்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தச் சோதனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் சேர்த்து, மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட ஆணையத்தின் அலுவலர்கள் 6 பேர் உட்பட மொத்தம் 14 பேர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் பாயும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறாக முறைகேடாக அனுமதி பெற்று எவ்வளவு கோடிக்கணக்கான ரூபாய் என்.ஜி.ஓக்கள் பெற்றுள்ளார்கள் என்பதையும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: நாடு முழுவதும் சென்னை, கோவை உள்ளிட்ட 40 இடங்களில் சிபிஐ சோதனை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.