'உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காகத் தான் சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறேன்' - முதலமைச்சர்

author img

By

Published : May 23, 2023, 1:40 PM IST

C M Stalin has said that the purpose of going on a 9-day official visit to Singapore and Japan is to call for the World Investor Conference

'சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறைப் பயணமாக செல்வதன் நோக்கமே அடுத்த ஆண்டு சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கத்தான்' என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-ல் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், 9 நாள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23.05.2023) பயணம் மேற்கொண்டார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்திக்கும் முதலமைச்சர், அங்கு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதோடு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்.

அதைத்தொடர்ந்து, மே 26ஆம் தேதி ஜப்பான் நாட்டுக்குச் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜப்பான் மற்றும் ஒசாகாவில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதோடு, தொழில் அதிபர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார்.

சிங்கப்பூர் செல்ல சென்னை விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் புத்தகம் கொடுத்து, வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசர், முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவரிடம் பேசி, அவரின் தோளில் தட்டி வாழ்த்தி அனுப்பினார்.

இதற்கு முன்னதாக ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.

C M Stalin has said that the purpose of going on a 9-day official visit to Singapore and Japan is to call for the World Investor Conference
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்த் தூவி மரியாதை

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வருகிற 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு, பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறோம். அந்த அடிப்படையில், ஒன்பது நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணத்தை நான் மேற்கொள்கிறேன்.

என்னோடு தொழில்துறை அமைச்சர் அவர்களும், அரசு துறையினுடைய உயர் அதிகாரிகளும் வருகிறார்கள். ஏற்கனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளோடு ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே, இப்போது ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன்.

நான் செல்கின்ற இடங்களில் எல்லாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதோடு முதலீட்டாளர்களை நேரிலும், மாநாடுகள் வாயிலாகவும் சந்தித்தும் பேசவிருக்கிறேன். ஒரு சில புதிய தொழில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன. இந்தப் பயணத்தினுடைய முக்கிய நோக்கம் என்பது வருகிற 2024 ஜனவரி மாதம் நடைபெற இருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதுதான்.
கடந்த மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாட்டின் பயணத்தின்போது பெறப்பட்டிருக்கக்கூடிய முதலீடுகள் எவ்வளவு என்று கேட்டீர்கள் என்றால்,

கடந்த முறை நான் மேற்கொண்ட துபாய் பயணத்தின்போது 6,100 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 15,100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதில் ஷெராப் குழும நிறுவன முதலீடுகளை குறிப்பிடலாம். லூலூ பன்னாட்டு குழுமம் கோயம்புத்தூரில் தன் திட்டத்தை தொடங்கிவிட்டது. சென்னையில், தன் திட்டத்திற்காக நிலம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. நிலம் கிடைத்தவுடன் கட்டுமானப் பணிகளை துவக்கிடத் தயாராக இருக்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்டிருக்கக்கூடிய முதலீடுகள் எவ்வளவு என்று கேட்டீர்கள் என்றால், ஜுலை 2021 முதல் 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளன. 2,95,339 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்தும்போது, 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும். அந்த அடிப்படையில் தான், இந்தப் பயணத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

ஜப்பானில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை நாங்கள் சந்திக்க இருக்கிறோம். அங்கு சென்ற பிறகுதான் முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், முதலமைச்சரின் தனிச் செயலாளர் தினேஷ் உள்ளிட்டோர் இன்று செல்கின்றனர். ஏற்கனவே தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், மற்றும் சில துறைகளின் செயலாளர்கள் முன்கூட்டியே சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிட்னியில் பிரதமர் மோடி - ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி சி.இ.ஓ.,க்களுடன் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.