'வாரிசு' படக்குழு மீது இந்திய விலங்கு நல வாரியம் பரபரப்பு புகார்

author img

By

Published : Nov 24, 2022, 11:44 AM IST

வாரிசு படக்குழு மீது இந்திய விலங்கு நல வாரியம் பரபரப்பு புகார்

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பில் முறையான அனுமதியின்றி விலங்குகளை பயன்படுத்தியதாக படக்குழு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய விலங்கு நல வாரியம் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது.

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், வாரிசு. இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் 5 யானைகள் மற்றும் பல மாடுகளை வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாகத்தெரிகிறது.

இவ்வாறு அனுமதியின்றி யானைகள் கொண்டு வரப்பட்டு படப்பிடிப்பிற்கு பயன்படுத்துவதாக வந்த தகவலின் பேரில், ஈவிபி பிலிம் சிட்டிக்கு சென்ற பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் இந்தச்சம்பவம் தொடர்பாக அத்துமீறி டிரோன் பறக்கவிட்டதாக செய்தி நிறுவனம் மீது படக்குழு அளித்தப் புகாரின் அடிப்படையில், மூன்று பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேநேரம் பொருட்களை சேதப்படுத்தியதாக செய்தி நிறுவனம் கொடுத்தப்புகாரின் அடிப்படையில், திரைப்படத்தின் புரொடக்சன் மேனேஜர் உள்பட மூவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகள் கொண்டு வரப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, இந்திய விலங்கு நல வாரியத்தின் விலங்கு நல ஆர்வலர் பால்ராஜ், டிஜிபி மற்றும் மத்திய வனத்துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரில், “வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது 5 யானைகள் அனுமதியின்றி பயன்படுத்துவதாக தகவல் வந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, 5 யானைகளுக்கும் முறையான ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது. மேலும் படப்பிடிப்பில் வன விலங்குகளை வைத்து படப்பிடிப்பு நடத்தும்போது, அதற்கான கால்நடை மருத்துவர், உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும்.

ஆனால், எதுவுமே இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். பின்பு உடனடியாக ஐந்து யானைகளும் படப்பிடிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டன. எந்த ஒரு பாதுகாப்புமின்றி படப்பிடிப்பிற்கு யானைகள் அழைத்து வரப்பட்டது சட்டத்திற்கு எதிரான செயல். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலர்கள் முறையாக விசாரணை நடத்தாமல் உள்ளனர்.

இதுதொடர்பாக பல அலுவலர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்துள்ளனர். எனவே, உடனடியாக வாரிசு படக்குழு மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்பட சம்மந்தப்பட்ட நபர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு மிருகங்களை பயன்படுத்துவதற்கு முன்பு விலங்கு நல வாரியத்தில், பயன்படுத்தப்படும் விலங்கு குறித்து பதிவு செய்யப்பட்டு, விலங்கு நல வாரியத்திடமும் படப்பிடிப்பிற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு அவ்வாறான முறையான அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: வாரிசு படத்தை மறைமுகமாக வெளியிடும் ரெட் ஜெயன்ட்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.