வரும் மார்ச் 26ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்!

author img

By

Published : Mar 17, 2023, 8:35 PM IST

Updated : Mar 17, 2023, 9:09 PM IST

மார்ச்

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதே பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்ஸிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

பொதுக்குழு செல்லும், ஆனால் தீர்மானங்கள் குறித்து நீங்கள் தேர்தல் ஆணையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ பார்த்துக்கொள்ளவும் என்ற தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பிற்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது. அதே பொதுக்குழுவில் இன்னும் நான்கு மாதத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு காரணமாக நான்கு மாதங்களில் ஈபிஎஸ் தரப்பினரால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த முடியவில்லை. மேலும் பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்விற்கான அடிப்படை விதிகள் மாற்றம் செய்யப்பட்டன.

குறிப்பாக, பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு 10 மாவட்ட செயலாளர் முன்மொழிய வேண்டும் எனவும், 10 மாவட்ட செயலாளர் வழிமொழிய வேண்டும் எனவும், 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் போட்டி போட முடியும் என ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டினர். மேலும், இது போன்ற நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானது என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் மார்ச் 26ஆம் தேதி அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுகவின் தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று(மார்ச்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுகவின் சட்ட திட்ட விதி 20, பிரிவு 2-ல் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார். அதன்படி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது.

வரும் மார்ச் 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்ப நாள், மார்ச் 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள், மார்ச் 20ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை, மார்ச் 21ஆம் தேதி வேட்பு மனு திரும்ப பெறுதல், மார்ச் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நாள், மார்ச் 27ஆம் தேதி வாக்குப்பதிவு.

மேலும், பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் உறுப்பினர்கள் மேற்கண்ட கால அட்டவணைப்படி, தலைமைக் அலுவலகத்தில் கட்டணத் தொகை 25,000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கழக சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் வழங்கலாம். பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளை எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "விளக்கமும் அளிக்காமல் ஓபிஎஸை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது" - உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு விளக்கம்

Last Updated :Mar 17, 2023, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.