'கச்சத்தீவு உடன்படிக்கைக்குப் பின்புதான் இந்தியா, இலங்கை மீனவர்கள் நட்பில் பாதிப்பு!'

author img

By

Published : Feb 21, 2022, 4:25 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் தொண்டைமான்

கச்சத்தீவு உடன்படிக்கைக்குப் பின்புதான் இந்திய, இலங்கை மீனவர்களின் நட்பில் பாதிக்கப்பட்டுவருகிறது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் துணைத் தலைவர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

சென்னை: இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் துணைத் தலைவர் செந்தில் தொண்டைமான், இலங்கை சமூக உள்கட்டமைப்புத் துறையின் அமைச்சர் ஜீவன் தொண்டைமான், ராமேஸ்வரம் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அப்போது, இலங்கைத் தமிழர் நலன், மீனவர்கள் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசியுள்ளனர். தொடர்ந்து இது குறித்து செய்தியாளரிடம் பேசிய செந்தில் தொண்டைமான், “இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக இலங்கையிலுள்ள மலைவாழ் மக்களுக்கும் நட்புறவு குறித்துப் பேசப்பட்டது.

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கையில் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். இதைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கை குறித்து பேசப்பட்டது. எதிர்காலத்தில் இலங்கை மீனவர்களுக்கும், தமிழ்நாடு மீனவர்களுக்கும் எவ்வாறு நட்புறவு ஏற்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது.

1974 - 76ஆம் ஆண்டு கச்சத்தீவு உடன்படிக்கைக்குப் பின்புதான் இலங்கையிலும், இந்தியாவிலும் மீனவர்கள் போராடிவருகின்றனர். இரண்டு பக்க மீனவர்களின் வாழ்க்கை நிம்மதியற்று உள்ளது. அந்தக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் முறையான முறையில் இல்லை எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்தபோது, இதுபற்றி மறுபரிசீலனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள தமிழ்நாடு மீனவர்களை எவ்வாறு 1 அல்லது 2 மாதங்களில் விடுவிக்கிறமோ அதேபோல் இந்தியாவிலுள்ள இலங்கை மீனவர்களை ஆறு மாதத்தில் விடுவிக்க முதலமைச்சர் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கூறினோம். இது குறித்து பரிசீலனை செய்வதாகத் தெரிவித்தார்.

செய்தியாளரைச் சந்தித்த செந்தில் தொண்டைமான்

இந்திய அரசு இலங்கை அரசுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் வழியாக இலங்கைத் தமிழக மீனவர்களின் ஆதாரமுள்ள வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கைச் சிறையிலுள்ள தமிழ்நாடு மீனவர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கை முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்.

கச்சத்தீவு உடன்படிக்கை பின்புதான் இந்திய - இலங்கை மீனவர்களின் நட்பில் பாதிப்பு வந்தது. இந்தியாவுடன் பண்பாட்டு ரீதியாக நட்பு கொண்டுள்ளோம். இலங்கை வளர்ந்துவரும் நாடு. பொருளாதாரத்தை வளர்க்கவே சீனாவுடன் நட்புறவு கொண்டுள்ளோம். இலங்கையில் தமிழர்கள், பிரதமர், ஜனாதிபதி ஆகிய பதவிகளைத் தவிர மற்ற அனைத்து உயர் பொறுப்புகளில் பதவி வகிக்கின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: உலகத் தாய்மொழி தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.