ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழ் வாக்கு வாங்குவார் - ஜெயக்குமார்

author img

By

Published : Jan 22, 2023, 4:04 PM IST

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழே தான் வாக்கு பெறுவார் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதனை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி மற்றும் கோகுல இந்திரா உள்ளிட்டோர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

அதைத்தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தேவநாதன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் தன்னை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார். தாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'திமுக அரசு மீது வாக்காளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதை மக்களுக்கு எடுத்துச்சொல்லி திமுகவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும். வருகிற 2024 மக்களவைத் தேர்தலிலும், அதேபோல் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என மக்கள் பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல்கள் அமையும்' என்றார்.

தொடர்ந்து, ஓபிஎஸ்; குஜராத் பயணம் குறித்த கேள்விக்கு, 'இந்தியா ஒரு சுதந்திர நாடு. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக கொண்டு சீரும் சிறப்புமாக அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தாம் தான் அதிமுக என ஓபிஎஸ் எவ்வாறு சொல்ல முடியும். அவ்வாறு சொல்வது சட்டரீதியாக தவறு' என்றார்.

'ஏ பார்ம் பி பார்மில் கையெழுத்தும் போடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது. அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும், அதன் மூலம் அதிமுகவுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்கிற வகையில் திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுவதாக அதிமுக தொண்டர்கள் பார்க்கின்றனர்.

ஓபிஎஸ், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டால், அவரை மக்கள் சுயேட்சையாக தான் கருதுவார்கள். இந்த தேர்தலில் நோட்டாவுக்கும் கீழே தான் ஓபிஎஸ் வாக்கு வாங்குவார்' என விமர்சித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் படிக்க வரும் வெளிமாநில மாணவர்கள் தமிழ் கற்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.