சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; எந்த கூட்டணியில் யார் யார்?

author img

By

Published : Jan 22, 2023, 7:17 AM IST

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக ஆதரவு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தனித்தனியாக சந்தித்தனர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினர் தனித்தனியாக கணக்கு போட்டு கொண்டிருக்கும் நிலையில் பாஜகவின் கணக்கு என்ன என்பது குறித்தான ஒரு தொகுப்பை காணலாம்.

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை தீவிரமாக இறங்கி உள்ளன. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் பிரிந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தனித்தனியாக ஆதரவு கோரி வருகின்றனர்.

ஈபிஎஸ் அணியினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகின்றனர். மறுபுறம் ஓபிஎஸ் அணியினர் கூட்டணி கடசிகளை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்த ஓபிஎஸ் தேர்தலில் ஆதரவு கோரினர்.

அதேநேரம் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக அணிக்கு ஆதரவளிப்பதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களிடையே குளப்பத்தை ஏற்படுஇத்தி உள்ளது. தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு கோரினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "பாஜக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்ததாகவும் தெரிவித்தார். மாநில நலன் பற்றி விரிவாக மனம் விட்டு இருதரப்பினரும் பேசியதாகவும், இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் பட்சத்தில் தேசிய நலன் கருதி ஆதரவு அளிப்பதாக கூறியதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாத பட்சத்தில் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்குமாறு அண்ணாமலையை ஓபிஎஸ் தரப்பு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜகவை பயன்படுத்தி ஈபிஎஸ் அணியை எதிர்கொள்ள வியூங்களை ஓபிஎஸ் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஈபிஎஸ் தரப்பினரும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது.

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இறுதியாக ஈபிஎஸ் தரப்பினர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். பாஜகவின் நிலைப்பாட்டை பொறுத்தவரை அதனுடைய தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது.

அதேநேரம் பாமக, ஈரோடு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை கொண்டு உள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும், தனது செல்வாக்கை நிரூபிக்க சுயேட்சையாகவும் களம் இறங்கும் நோக்கில் ஈபிஎஸ் அணியினர் செயல்பட்டு வருகின்றனர். இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்குள் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவரும் என ஈபிஎஸ் தரப்பினர் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பு வெற்றி பெற முடியுமா என ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த தலைமுறைக்கான தலைவர் என நிரூபிக்க முயற்சிகள் எடுத்து வருகிறார். அதிமுக வரலாற்றில் 1973ஆம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தல் திருப்பு முனையாக அமைந்தது.

பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் திருப்பு முனையாக அமைந்தது. அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஒரு தலைவராக நிலை நிறுத்திக் கொள்ள ஈபிஎஸ் முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், பாஜக பொறுத்தவரை 2024-ல் நடைபெறக்கூடிய தேர்தலை கருத்தில் எடுத்துக்கொண்டு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளையும் ஒரே கோட்டில் வைத்து தான் பாஜக பார்க்கிறது. இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான முடிவுகளும் எடுக்க வாய்ப்பு உள்ளது.

முடிந்த அளவிற்கு இரண்டு அணிகளையும் ஒன்றிணைக்கும் வேலைகளை பாஜக மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. ஈபிஎஸ் அணியினர் முழுவீச்சில் தேர்தல் களத்தில் இறங்குவதால் பாஜக தனித்து போட்டியிடுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆனால் அண்ணாமலைக்கு தனித்து போட்டியிட ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தனித்து நின்றால் ஓபிஎஸ் அணியினர் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். இரட்டை இலையை முடக்கம் செய்து பாஜக தனித்து போட்டியிடவும் வாய்ப்புள்ளது. ஆனால் அந்த முடிவை எடுத்தால் 2024-ல் தனித்து போட்டியிடும் சூழல் ஏற்படும். இதனால் பாஜகவின் முடிவை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

அதிமுக கூட்டணிக்குள் மிக வேகமாக தேர்தல் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இது குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "எடப்பாடி பழனிச்சாமியை நம்புவதற்கு பாஜக தயாராக இல்லை.

இரட்டை இலையை முடக்குவதற்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. ஓபிஎஸ்சை கைவிடவும் பாஜக தயாராக இல்லை. ஒற்றுமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வராத பட்சத்தில் பாஜக தனித்து போட்டியிடவும் வாய்ப்புள்ளது. அண்ணாமலை மாநில தலைவராக பதவியேற்று முதல் தேர்தல் என்பதால் பிரபலமான வேட்பாளரை களம் இறக்கவும் வாய்ப்புள்ளது" என்றார்.

இதையும் படிங்க: தமிழும் அதன் இலக்கியங்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை - ஆளுநர் ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.