சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், அனைத்து தொண்டர்களும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, கழகத்தைக் காக்க உறுதிமொழி எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில், "உலகில் உள்ள மக்கள் இயக்கங்களில் எழுச்சியுடன் செயல்பட்டு வரும் அதிமுக எனும் இயக்கத்தை தாய்போல் சீராட்டி, பல இன்னல்கள் வந்தபோதும் காவல் தெய்வமாக காப்பாற்றி நம் கைகளில் தந்துவிட்டுச் சென்றவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. நமது விசுவாசம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் இந்த இயக்கத்திற்கும், இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர வைக்கும் மக்களுக்கும் தான் சொந்தம்.
இன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையை சந்திக்க உள்ளோம். நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களை திசை மாறா விசுவாசத்தால் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.
பிப்ரவரி 24 ஆம் தேதி மக்களை கண் இமைபோல் காத்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள். இந்த நாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் ”என் இல்லம் அம்மாவின் இல்லம்’’ என்று உளமார நினைத்துக்கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, அதிமுகவை காப்பதாக உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.