சென்னை ஏர்போர்ட் - 5 அடுக்கு பாதுகாப்பு அமல்

author img

By

Published : Jan 20, 2023, 11:02 PM IST

Etv Bharat

74வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை சர்வதேச விமானநிலையத்தில் கூடுதலாக 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது 7 அடுக்கு பாதுகாப்பாக மாறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

74 வது குடியரசு தின விழா - சென்னை சர்வதேச விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்

சென்னை விமானநிலையத்தில், 74-வது குடியரசு தின விழாவையொட்டி(74th Republic Day Celebration), கூடுதல் பாதுகாப்பாக 5 அடுக்கு பாதுகாப்பு முறை இன்று (ஜன.20) முதல் வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா வரும் 26ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

இந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ஒன்றிய உளவுத்துறைக்கு (Central intelligence agency India) தகவல் கிடைத்துள்ளன. இதையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் முக்கியமான ரயில், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சென்னை விமானநிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு (5 layer security at Chennai Airport) அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டு வருகின்றனா்.

அதைப்போல், வெடிகுண்டு நிபுணா்கள், மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமானநிலைய வளகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானநிலைய காா் பாா்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் காா்களை வெடிகுண்டு நிபுணா்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதைபோல், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (Central Industrial Security Force) அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக, விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 2ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால், அதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனா். அதைப்போல் BCAS பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏற்கனவே, உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து விமானநிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கின்றனா். அதைப்போல், விமானப் பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை விமானங்களில் ஏறும் இடத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது.

குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை துருவித்துருவி விசாரணை செய்து வருகின்றனர். பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. அதைப்போல், விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப் பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

விமானப் பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் பயணிகளை அறிவுறுத்தியுள்ளனா்.

சென்னை விமானநிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 30ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும் தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனா்.

இதையும் படிங்க: Republic Day 2023:குடியரசு தின விழா; பட்டியல் இனத்தவர்களுக்கு சாதி பாகுபாடின்றி கொடியேற்ற நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.