அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்!

author img

By

Published : May 23, 2023, 4:28 PM IST

Etv Bharat

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஒரு லட்சத்து 7ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு 22ஆம் தேதி மாலை வரை 3 லட்சத்து ஆயிரத்து 466 பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 8ஆம் தேதி காலை முதல் தொடங்கியது. 22ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டியல் மற்றும் விவரங்கள் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன.

மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அந்த கல்லூரிகள் குறித்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வதற்காகத் தகவல் மையத்தின் தொடர்பு எண்கள் எழுதி வைக்கப்பட்டன.

அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு 22ஆம் தேதி இரவு 12 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ் மொழிப் பட்டப்படிப்பு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழிப் பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

கல்லூரி வாரியாக மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு 25ஆம் தேதி கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும், கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கும் என உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'IASஆவதே கனவு' 470 மதிப்பெண்கள்..பள்ளியிலேயே முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவி ரியாஸ்ரீ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.