செங்கல்பட்டு: ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை பெறும் பணியில் அனைத்து கட்சியினர் இன்று (செப்.15) முதல் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் பாஜக தொண்டர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி, கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தங்கள் கட்சியை வளர்க்கும் பொருட்டு, உள்ளாட்சி தேர்தலில், தனித்துப் போட்டியிட போவதாக பாமக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எந்த இடத்திலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும், தேசிய ஜனநாயக கூட்டணி நிலைப்பாடு என்ன என்பதை பாமக தான் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், மீனாட்சி என்ற பெண் நிர்வாகிக்கும் கட்சியினர் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: சேப்பாக்கம் சேகுவேரா...’ - உதயநிதியைத் தாக்கும் ஜெயக்குமார்!