முன்விரோதம் காரணமாக காவலர் கொலை

author img

By

Published : Aug 31, 2022, 10:20 PM IST

Etv Bharat முன்விரோதம் காரணமாக காவலர் கொலை

செங்கல்பட்டு தலைமைக் காவலரை முன்விரோதம் காரணமாக கார் ஏற்றிக் கொலை செய்ததாக, அவருடைய அக்கா கணவரை செய்யூர் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு: செய்யூர் அடுத்த வடக்கு செய்யூரைச் சேர்ந்தவர் கமலேஷ் குமார். 2013ஆம் ஆண்டு காவலர் பணிக்குத் தேர்வான இவர், நீலாங்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருடைய அக்கா செல்வி. இவர் சில வருடங்களுக்கு முன்னதாக அதே பகுதியைச் சேர்ந்த மதன்பிரபு என்ற தனியார் வங்கி ஊழியரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதிலிருந்தே கமலேஷ் குமாருக்கும் மதன்பிரபுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நாள்களுக்கு முன்னதாக மதன் பிரபுவின் பெரியப்பா இறந்து விட்டார். துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கமலேஷ் குமாருக்கும், மதன் பிரபுக்கும் மீண்டும் வாய்த் தகராறும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் கமலேஷ் குமார், மதன் பிரபுவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (ஆக-30) செய்யூர் பகுதியில் உள்ள தனது வயல்வெளிக்குச் சென்று விட்டு கமலேஷ் குமார் இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது தனக்கு வந்த போனை பேசுவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் மதன் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் காரை ஓட்டி வந்து கமலேஷ் குமார் மீது படு பயங்கரமாக மோதினர். இதில் காருக்கு அடியில் கமலேஷ் சிக்கினார்.

மேலும் மோதிய வேகத்தில் காரின் முன்புறம் தீப்பற்றி எரிந்தது. அதனைத் தொடர்ந்து மதன் பிரபுவும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் காவல் துறையினர் ஆகியோர் தீயை அணைத்து காரில் சிக்கியிருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று 31ஆம் தேதி உடற்கூராய்வு முடிந்து கமலேஷ் குமாரின் உடல் சொந்த ஊருக்கு வந்தது. அப்போது முன்விரோதம் காரணமாக கமலேஷ்குமார் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார் என்று கூறியும் கொலையாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும் கமலேஷ் குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து முதலில் விபத்து என செய்யூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் அந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை தேடினர். இதனையறிந்த, மதன் பிரபு தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. கொலையில் ஈடுபட்டதாக மதன் பிரபுவின் நண்பர்கள் பார்த்திபன், பரசுராமன், மதன் பிரசாத், தாமோதரன் ஆகிய நால்வரைப் பிடித்து விசாரித்தனர்.

அதில் மதன்பிரபு திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையின் அடிப்படையில் நால்வரையும் கைது செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள மதன் பிரபுவைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆனைமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.