திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் மதியழகன் தலைமையிலான ஊழியர்கள், முகக்கவசம் அணியாதவர்கள் குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த ஒருவர் மதியழகனிடம் தகராறில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அந்த நபர் மிரட்டவும் செய்தார்.
இந்தச் சம்பவத்தை அறிந்த காவலர் பார்த்திபன் தகராறில் ஈடுபட்டவரிடம் பேசியபோது, காவலரை அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டார்.
போதையில் தகராறு
இதனால் பலத்த காயமடைந்த பார்த்திபனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கத்தியால் தாக்கியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் நாரவாரிகுப்பத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பதும், மது போதையில் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.