இது குறித்து, பாலகிருஷ்ணன் சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கையில், ‘நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. எதிர்பார்த்ததை போல் குறைவான தமிழ்நாடு மாணவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் இரு மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
இது மத்திய அசின் மருத்துவக் கல்வி கொள்கையால் நடத்தப்பட்ட படுகொலை. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நீட் தேர்வுக்கு எதிராக வலுவான போராட்டத்தை எழுப்ப வேண்டும்.
தேர்தலுக்கு முன் சேலம் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்டவற்றைப் பற்றிப் பேசாத அரசு தற்போது அத்திட்டங்களைத் தீவிரமாக செய்துவருகிறது. இதனை எதிர்த்து ஜூன் 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்டா மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடத்தப்படும்.
மேலும், ஏழு தமிழர் விடுதலைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச முடியாது. அது மாநில அரசின் பிரச்னை. அது சம்பந்தமாக சட்டப்பேரவையில் அரசுதான் குரல் கொடுக்க வேண்டும். அரசு கொடுத்த தீர்மானத்தின் மீது ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
வேளாண் கல்லூரி மாணவிகளை எரித்த அதிமுகவினரின் விடுதலை தீர்மானத்தில் கையெழுத்திட்ட ஆளுநர் ஏழு தமிழர் விடுதலையில் கையெழுத்திட மறுக்கிறார். எனவே அரசுதான் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டும்' எனத் தெரிவித்தார்.