எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு MNC வேலைக்கான AMCAT பயிற்சி - தாட்கோ நடவடிக்கை!

எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு MNC வேலைக்கான AMCAT பயிற்சி - தாட்கோ நடவடிக்கை!
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற உதவும் வகையில் AMCAT பயிற்சியை தாட்கோ வழங்கவுள்ளதாகவும், அதில் சேர்ந்து மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி இன்று(ஜன.25) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெற Aspiring Minds Computer Adaptive Test (AMCAT) பயிற்சியை அளிக்கவுள்ளது.
இப்பயிற்சியை பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த மூன்று மாத பயிற்சிக்கான அனைத்து செலவுகளையும் தாட்கோ ஏற்கும். மேலும், இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடித்து AMCAT தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம். எனவே இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்மா சிமெண்ட் வினியோகத்தில் முறைகேடு: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை!
