’மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Aug 11, 2021, 11:19 AM IST

Updated : Aug 11, 2021, 1:38 PM IST

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள்

11:14 August 11

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை தினம், இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள்
மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள்

சென்னை: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம், உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டடக்கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் இக்கோயில் விளங்குகிறது.  

அண்மையில், இக்கோயிலை உலக புராதன பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ (UNESCO) அறிவித்தது. இதன் சிறப்பினை கண்டுகளித்திட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.  

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதி வாழ் மக்களால் வெகு விமரிசையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.  

மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இவ்விழாவை அரசு விழாவாகக் கொண்டாட அப்பகுதிவாழ் மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இக்கோரிக்கையினை பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.

தற்போது நிலவி வரும் கரோனா நோய்த் தொற்று காரணமாக, வரும் ஆண்டு முதல் ஆடி திருவாதரை விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் முறைப்படி அர்ச்சனை

Last Updated :Aug 11, 2021, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.