Consumer Court: 'நுகர்வோர்' என்பவர் யார்? அரியலூர் கோர்ட் தடாலடி தீர்ப்பு

author img

By

Published : Jan 20, 2023, 10:12 PM IST

Consumer Court

Consumer Court: தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வங்கிக் கணக்கில் செலுத்திய பண விவகாரம் தொடர்பான வழக்கில், அரசின் இலவச திட்டங்களை பெறுபவர்கள் நுகர்வோர்கள் அல்ல என்றும், இம்மாதிரியான விவகாரங்களில் யாரும் தங்களை நுகர்வோர்கள் என்ற அடிப்படையில் எவ்வித வழக்குகளும் தொடர இயலாது எனவும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர்: அரசின் இலவச சேவை திட்டங்களை பெறுபவர்கள் நுகர்வோரே அல்ல. அவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் எந்த வழக்கும் தொடர இயலாது என்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தடாலடி தீர்ப்பை இன்று (ஜன.20) அளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமம், சுப்பிரமணியர் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர், ராஜசேகர் மனைவி மலர்கொடி. இவர் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'தமிழ்நாடு கைத்தறி பட்டு நெசவு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறேன். குழந்தைகளுக்காக கல்வி உதவித்தொகை கேட்டு, அரியலூர் சின்ன கடை தெரு என்ற பகுதியில் இயங்கும் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தேன்.

எனக்கு 30.11.2017 அன்று மேற்படி அலுவலகத்திலிருந்து ரூ.9,250 மட்டும் உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கல்வி செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், வங்கி கணக்கில் சென்று பார்த்தபோது, எந்த தொகையும் வரவே இல்லை. இது தொடர்பாக, அரியலூருக்கும் கல்லாத்தூருக்கும் பலமுறை அலைந்து பார்த்தேன். கடந்த 26.10.2018அன்று தொழிலாளர் உதவி ஆணையருக்கு வக்கீல் நோட்டீஸ் அளித்து எனது பெயரில் வரவு வைக்கப்பட்டதாக சொன்ன அந்த ரூ.9,250 எங்கே என்று கேட்டேன். 30.11.2020 வரை பதில் இல்லை.

எனவே, உரிய தகவல் தர மறுத்ததோடு எனது பெயரில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எனது கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக சொன்ன ரூ.9,250-யை வழங்க வேண்டும்' என்று மலர்கொடி கோரி இருந்தார்.

இந்த மனுவுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மிக வித்தியாசமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. ’மனுதாரர் மலர்கொடி எங்களுக்கு கொடுத்த வங்கி கணக்கு எண்ணில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மலர்கொடி தனது கணக்கில் பணம் வரவில்லை என்று தெரிவித்தவுடன் வங்கி கணக்கு எண் குறித்து உடனடியாக வங்கி நிர்வாகத்திடம் கேட்டோம்.

ஆனால் கடந்த பல மாதங்களாகவே மலர் கொடியின் மேற்குறிப்பிட்ட வங்கி எண் செயல்பாட்டிலேயே இல்லை என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. செயல்பாட்டில் இல்லாத ஒரு வங்கிக் கணக்கு எண்ணுக்கு தொகை சென்றுவிட்டது. இதில் எங்கள் தரப்பு தவறு எதுவும் இல்லை.

அவர் அளித்த வங்கி எண்ணுக்கு நாங்கள் பணம் செலுத்திவிட்டோம். அவ்வளவுதான்’ என்று ஒதுங்கிக் கொண்டனர். இதற்கு பதில் மனு தாக்கல் செய்த மலர்கொடி தரப்பினர் ’மேற்படி வங்கி கணக்கு செயல்படுத்தப்படாமல் இருப்பது உண்மைதான். மாற்று வங்கிக் கணக்கு’ என்று புதிதாக ஒரு எண்ணை கொடுத்தனர்.

இலவச திட்டங்கள் - யாரும் உரிமை கோரல் இயலாது: அதைக் கேட்ட தொழிலாளர் உதவி ஆணைய அதிகாரிகள் ’நல்லெண்ண அடிப்படையில் வேண்டுமானால் ஏற்கனவே, இயங்காமல் இருந்த அக்கவுண்டுக்கு அனுப்பப்பட்ட தொகையை புதிய எண்ணுக்கு அனுப்ப முயற்சிக்கிறோம். இதுவும் முற்றிலும் நல்லெண்ண அடிப்படை மட்டும்தான். இது தவிர, தமிழ்நாடு அரசின் இலவச திட்டங்களுக்கு யாரும் உரிமை கோரல் இயலாது. இலவச திட்டங்களை பெறுபவர்கள் நுகர்வோரும் அல்ல’ என்று பதில் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராம்ராஜ் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு,

* 'மனுதாரர் தனது வங்கிக் கணக்கில் ரூ.9250 வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வரவு வைக்கவில்லை என்று மலர்கொடி கூறினார். ஆனால், அவரது குறிப்பிட்ட வங்கி கணக்கே இயங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

* அரசின் உதவித்தொகையை பெறுபவர்கள் நுகர்வோர் அல்ல.

* எனவே, நுகர்வோர் என்ற அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்தது தள்ளுபடி செய்யப்படுகிறது.

* அரசு வழங்குவது இலவச திட்டம். அந்தத் திட்டத்துக்கு உரிமை கோரி தன்னை நுகர்வோர் எனக்கூறி வழக்கு தொடர்வது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய விஷயம்.

*ஆனால், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட மனுவில், நல்லெண்ண அடிப்படையில் தவறுதலான அக்கவுண்டுக்கு சென்ற பணத்தை புதிய அக்கவுண்ட் எண்ணுக்கு தருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்தை வரவேற்று, சட்ட விதிகளின்படி அவ்வாறு வழங்க வாய்ப்பு இருந்தால் அந்தத் தொகையை வழங்கலாம். மற்றபடி எவ்வித இழப்பீடும் இதில் கோர இயலாது' என்று அரியலூர் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராம்ராஜ் உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: 'மின் கம்பங்களில் விளம்பரம் செய்யாதீர்கள்' - அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.